இந்திய விண்வெளியியல் துறையின் தந்தையாகப் போற்றப்படும் விஞ்ஞானி விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100-வது பிறந்தநாளை ஒட்டி கூகுள் நிறுவனம், டூடுள் வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளியியல் துறையின் தந்தையாக போற்றப்படுபவர் விக்ரம் சாராபாய். இவர் 1919-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி அகமதாபாத்தில் பிறந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் இயற்பியலில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆராய்ச்சியாளராக தன்னை வடிவமைத்துக் கொண்டார். காஸ்மிக் கதிர்களை ஆராய்வதற்காக நாடு முழுவதும் கண்காணிப்பு மையங்களை அமைத்தார். பெங்களூரு, புனே, இமயமலைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆய்வு மையங்களில் தாமே உருவாக்கிய கருவிகளைப் பொருத்தினார்.
இவரது அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மையம் விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தது. ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு விக்ரம் சாராபாய் தலைமை வகித்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்படுவதற்கு முழுமையான காரணமாக இருந்தார். இந்தியாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் வளர்ச்சியில் முன்னோடியாக சாராபாய் இருந்தார். இதன் மூலம் 24 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் பேருக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.
இந்திய அணுக்கரு இயலின் தந்தை ஹோமி ஜஹாங்கிர் பாபா மறைந்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராக இருந்து, அதை மேலும் விரிவுபடுத்தினார். மேலும், இந்தியர்கள் உயர் கல்வி பெறுவதற்காக அகமதாபாத்தில், இந்திய மேலாண்மைக் கழகத்தை (IIM) உருவாக்கினார். கடந்த 1966-ல் பத்மபூஷண் விருதும், 1972-ல் பத்ம விபூஷண் விருதும் இவரின் சாதனைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், சாராபாயின் 100-வது பிறந்த தினத்தை ஒட்டி, அவரை நினைவு கூறும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுளை வெளியிட்டுள்ளது.