ஒருகாலத்தில் குதிரைவீரர்களால் தன்னிச்சையாக உருவானதுதான் இடதுபுறச் சாலைப் பயணம். இப்போதும் இரு சக்கர வாகனங்களுக்கும் இந்த சௌகரியங்கள் அப்படியே பொருந்தும்.
கனடாச் சாலைகளில் வலப்புறத் திசைப் பயணங்களாக இருக்கின்றன. நம் நாட்டில் எப்படிச் சாலைகளில் இடப்புறம் போவோமோ அப்படி அங்கு வாகனங்கள் எல்லாமே வலப்புற விதிகளைப் பின்பற்றிப் போய்க்கொண்டிருந்தன. “சாலையில் மட்டுமல்ல, சமூகத்திலும் இடதுபுறம் பாதுகாப்பானது” என்றெல்லாம் இளமையில் கவிதை என்ற நினைப்பில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு இது ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. இடதுபுறச் சாலை விதிகள்தான் நமக்குப் பரிச்சயம். நமக்கு மட்டுமல்ல. நம்மைப் போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் இப்படித்தான் உள்ளது. அதன் காலனி நாடான கனடாவிலும் இடதுபுறச் சாலை விதிகள்தான் உள்ளன. உலகில் ஏறக்குறைய எழுபத்தைந்து நாடுகளில் இடதுபுற சாலை விதிகள் இருக்கின்றன. உலகின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் தொகை இடதுபுற விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தியா, ஹங்காங், புரூனே, வங்காளதேசம், பூட்டான், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும், கென்யா, தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, மாலவி, ஜாம்பியா, நமீபியா, உகாண்டா, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இடதுபுறச் சாலை விதிகள்தாம்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வலதுபுறச் சாலைவிதிகள் பின்பற்றப்படுகின்றன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால் தொடர்புடைய நாடுகள் இடதுபுறச் சாலை விதிகளிலிருந்து வலதுபுறச் சாலைவிதிகளுக்கு மாறிய வரலாறுகளும் உண்டு.
சாலைவிதிகள் எப்படி தோன்றின?
சாலை விதிகள் எப்படித் தோன்ற ஆரம்பித்தன என்பது ரொம்பவும் சுவாரசியமான விஷயம். மனிதன் இயல்பிலேயே வலதுகைப் பழக்கமுள்ளவனாக இருந்திருக்கிறான். அவன் குதிரைகளில் பயணிக்கிறபோது வலதுகாலைத் தூக்கிப்போட்டுக் குதிரைகளில் ஏறுவான். இயல்பிலேயே நீண்ட வாள்களும் குறுவாள்களும் இடதுபுறத்தில் வைத்திருப்பது வசதியாக இருந்திருக்கிறது. எதிரிகள் வருகிறபோது சடாரென வாளினை வலதுகையால் உருவுவதற்கும் இடதுபுறம் வாள்கள் இருப்பதுதான் சௌகரியம். சவாரியிலிருந்து இறங்குகிறபோது வலதுகாலைத் தூக்கிப் பின்வாக்கில் தரையில் கால் ஊன்றுவான். அதாவது இடதுபுறத்தில் இறங்குவான். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அவன் இடதுபுறச் சாலையில் பயணிப்பதுதான் பாதுகாப்பானதாக இருந்தது. ஒருவேளை சாலையின் வலதுபுறம் பயணித்தால் அவன் அவசரமாக இறங்குகிறபோது சாலையின் நடுவில் இறங்கவேண்டியதாக இருக்கும். இப்படி ஒருகாலத்தில் குதிரைவீரர்களால் தன்னிச்சையாக உருவானதுதான் இடதுபுறச் சாலைப் பயணம். இப்போதும் இரு சக்கர வாகனங்களுக்கும் இந்த சௌகரியங்கள் அப்படியே பொருந்தும்.
வலதுபுற பழக்கமாக எப்படி மாறியது
இடதுபுறச் சாலை விதியானது பின் எப்படி வலதுபுறப் பழக்கமாக மாறியது என்பதும் இன்னொரு சுவாரசியமான தகவல்தான். கி.பி.1700 களில் பிரான்சு, அமெரிக்கா நாடுகளில் நிறைய குதிரைகள் பூட்டிய வண்டிகளில் பண்ணைப் பொருள்களை ஏற்றிச் செல்வார்கள். குதிரைகளைச் செலுத்துபவர்க்கென இருக்கை இருக்காது. முன்னால் வரிசையாகப் பூட்டியிருக்கும் ஏழு குதிரைகளில் இடது குதிரையில் அமர்ந்தபடி ஓட்டிச் செல்வார். வலது கையால் சாட்டையைச் சுழற்றி வலது பக்கம் இருக்கிற குதிரைகளைச் செலுத்துவார். இதுவும் சௌகரியம் சார்ந்த விஷயம்தான். எதிரே வருகிற வேறு டிரக்குகளின் வலதுபுறம் இவன் செலுத்துகிற வாகனத்தை இடித்துவிடக் கூடாது. இடதுபுறக் குதிரையில் அமர்ந்திருப்பவனுக்குப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கவேண்டுமெனில் இவன் செலுத்துகிற வாகனம் வலதுபுறமாகச் சென்றால்தான் வசதி. அதனால்தான் வலதுபுறமாக வாகனத்தைச் செலுத்துகிற வழக்கம் வர ஆரம்பித்தது. . இப்படித்தான் வலதுபுறச் சாலை விதிகள் வரலாயின. கி.பி.1789 ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப் புரட்சியில் பிரபுக்கள் எல்லாம் சாலையின் இடதுபுறமாக அணிவகுத்துச் சென்றனர். உழுகுடிகள் அனைவரும் வலதுபுறமாகச் சென்றனர். நெப்போலியனின் ஆட்சியை ஒட்டித்தான் பிரெஞ்சு நாட்டிலும் அவன் கைப்பற்றிய நாடுகளிலும் பெருமளவில் வலதுபுறச் சாலை விதிகள் வந்தன. கி.பி. 1794 இல் சட்டத்தின் மூலமாக பாரிசில் வலப்புறச் சாலைவிதிகள் அமலுக்கு வந்தன. அந்தந்த நாட்டின் சௌகரியத்திற்கு ஏற்றவாறும் அதன் முந்தைய வழக்கத்தின்படியும் அந்த நாடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாட்டின் சாலை விதிகளைப் பொறுத்தும் தமக்கு ஏற்ற சாலைவிதிகளைப் பின்பற்றுகின்றன.