internet

img

இணையப் பிரச்சனைகளைத் தவிர்க்க இண்டர்நெட்டை ஆஃப் பண்ணுங்க!?

இன்றைய நிலையில் எளிதில் தவிர்க்க முடியாத தொழில்நுட்பம் இணையம். பிறப்பு இறப்பு சான்றிதழ் முதல் பப்ஜி விளையாடுவது வரை அனைவருக்கும் ஏதாவது ஒருவகையில் இணையத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் விரிந்து படர்ந்து உலகத்தை தன்னுள்ளே சிக்கவைத்திருக்கிறது இணையவலை.\

தொழில்நுட்ப வளர்ச்சியின் நோக்கம் மக்களின் மேம்பாட்டிற்கானதாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் மேம்பாட்டிற்கு உதவுகிறதா என்ற கேள்வியை விட பாதுகாப்பாக இல்லை என்ற பதிலே சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.ஃபேஸ்புக்கில் தகவல் திருட்டு, வாட்ஸ்அப் வழியாக வைரஸ் அனுப்பி ஆண்ட்ராய்ட் ஃபோனையே கட்டுப்படுத்தலாம், டீம்வியூவர், எனி டெஸ்க் செயலிகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் கைவைக்கலாம் எனப் பல்வேறு பிரச்சனைகள் அன்றாட செய்திகளாகிவிட்டதைப் பார்க்கும்போது, இண்டெர்நெட்டே வேண்டாம், ஆஃப் செய்துவிடலாமா என்ற எண்ணம் பலருக்கும் வந்து போகிறது. அத்தனை சுலபமாக வலையைவிட்டு வெளியேறிவிட முடியுமா?

இன்றைய நிலையில் இணையத்தைவிட்டு வெளியேறுவது என்பது அத்தனை சுலபமல்ல. ஆனால், நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.சில இணையதளங்களில் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் வாட்ஸ்அப் பயன்படுத்த ஒரு ஃபோன், வங்கிக் கணக்கு பயன்படுத்த ஒரு ஃபோன் என இரண்டு வைத்துக் கொள்ளுங்கள் என்று தீர்வு சொல்கிறார்கள். இதைப் படிக்கும்போது ஃபோன் விற்பவர்கள் சொன்ன யோசனையோ என்று தோன்றுகிறது. இவர்கள் இன்னும் சில நாட்கள் கழித்து ஃபேஸ்புக்குக்கு ஒரு ஃபோன், பேச ஒரு ஃபோன் என்றுகூட யோசனை சொல்வார்கள். இதுபோன்ற யோசனைகள் நடைமுறையில் எல்லாருக்கும் சாத்தியமில்லை.

இணையத்தை குறைத்து பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்:
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், பப்ஜி செயலி எதுவாக இருந்தாலும் உங்கள் ஓய்வு நேரத்தில் சிறிதளவாக மட்டும் பயன்படுத்தவும். எப்போதும் இணையத்தை இயக்கத்தில் வைத்திருப்பது நமக்கும், ஃபோனுக்கும், நம்முடைய பணிச்சூழலுக்கும் நல்லதல்ல. தேவையான தகவலைப் பார்த்தபின் இணைய இணைப்பை ஆஃப் செய்து வைக்கவும்.இலவசமாகக் கிடைக்கிறது என்று வெளியிடங்களில் ஒய்ஃபீ சிக்னல்களைப் பெறுவதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக, வங்கிப் பரிமாற்றம், வாலட் சேவைகள் உள்ளிட்டவற்றை இலவச ஒய்ஃபீயில் பயன்படுத்தாமல் இருப்பது நலம்.'

உங்கள் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை அப்லோட் செய்வதை தவிர்த்திடுங்கள். ஃபோனில் வைத்திருப்பதுகூட பாதுகாப்பானதல்ல. உங்கள் ஃபோன் உங்களின் கண்ணாடி என்று கூட சொல்லலாம். உங்களைப் பற்றி மற்றவர்கள் அறிந்ததைவிட உங்கள் ஃபோனுக்குத்தான் அதிகம் தெரிந்திருக்கக்கூடும். “என்னப் பத்தி தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப்போறாங்க? தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போகுது!” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் மிகச்சிறந்த நல்லவராக, ஒழுக்கமானவராக, வெளிப்படையானவராக இருக்கலாம். இணையத்தைப் பொறுத்தவரை அந்த சான்றிதழ்களெல்லாம் பயன்தராது. தகவல் திருட்டு என்பது பணம், தொழில் போட்டி, பாலியல் வக்கிரம், இனக்குழு மோதல், உளவு பார்த்தல் எனப் பல முகங்கள் கொண்டது. எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் 100% இணையத்தில் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

வாட்ஸ்அப் புரொபைல் படங்களைப் பார்க்க உங்கள் மொபைல் எண் தெரிந்தால் மட்டும் போதுமானது. எளிதாக எவரும் உங்களை அறிந்து கொள்ள ஸ்டேட்டஸ் தகவல்களே போதுமானவை. வாட்ஸ்அப்பில் ஒரு மிஸ்டு கால் கொடுத்து கூட உங்கள் ஃபோனில் ஸ்பைவேர் ஆப்களை நிறுவ முடியும் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த குறைபாட்டை வாட்ஸ்அப் சரிசெய்திருந்தாலும், இதுபோன்ற வேறு குறைபாடுகள் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பிரச்சனை ஏற்படும்போதுதான் வெளியே தெரிய வருகிறது. அதுவரை பயன்படுத்தியவர்கள், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குறித்த செய்திகள் பல தெரியாமலே கடந்து போகிறோம்.

வாட்ஸ்அப் மட்டுமல்ல வேறு பல செயலிகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் வந்திருக்கின்றன - இப்போதும் சிக்கல்கள் இருக்கலாம். இவை பெரிய அளவில் பிரச்சனைகளை சந்திக்கும்போதுதான் வெளியுலகத்தால் அறிந்து கொள்ளப்படுகிறது. எந்த ஒரு செயலியை உங்கள் ஃபோனில் வைத்திருந்தாலும் அவை நம்பகமானவைதானா, நமக்கு எப்போதும் அவசியப்படுகிறதா என்பதை ஆலோசித்து பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கு அப்டேட்கள் கிடைக்கிறதா என்பதைப் பார்த்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
இலவசம் என்பதற்காக கண்ட கண்ட செயலிகளை நிறுவுவதைத் தவிர்த்திடுங்கள். குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், பிண்ட்ரெஸ்ட், டிவிட்டர் போன்ற எந்த வழியாகவும் வரும் ஆஃபர் தொடர்பான இணைய இணைப்புகளை (Web Address Links)கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். '

வங்கிக் கணக்கை உங்கள் மொபைல் எண்ணுடன் இணைத்துப் பயன்படுத்துபவர்கள் வங்கி அல்லது பிற பரிவர்த்தனை செயலிகளை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்த்து UPI வசதியான *99# என்ற எண்ணிற்கு டயல் செய்து உங்கள் 6 இலக்க மொபைல் UPI பின் எண்ணை உள்ளிட்டு உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இருப்பு அறிதல், பணம் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். இதற்கு இண்டெர்நெட்டோ, ஸ்மார்ட் ஃபோனோ தேவையில்லை. சாதாரண ஃபோனே போதுமானது.

இணையத்திலிருந்து வெளியேற முடியுமா?
இணையமே வேண்டாம் என்று ஆஃப் செய்துவிட்டு வெளியேறுவது என்பது சில மணி நேரமோ, சில நாட்களோ மட்டுமே சாத்தியம். இணையத்தால் சூழப்பட்ட இந்த உலகில் ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு இணையத்தை நோக்கி மீண்டும் நாம் தள்ளப்படுவது தவிர்க்க முடியாதது.

===என்.ராஜேந்திரன்===