தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மற்றும் 5 பேரை மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜி.என்.சாய்பாபா. மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டி, கடந்த 2014-ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் மோடி அரசு இவரை கைது செய்தது. மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் சாய்பாபா நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் ஜி.என்.சாய்பாபா மட்டுமன்றி, பத்திரிகையாளர் ஒருவர், பல்கலைக்கழக மாணவர்கள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம், மாவோயிஸ்ட் தொடர்புகள் மற்றும் நாட்டிற்கு எதிராகப் போரை நடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி பத்திரிகையாளர், தில்லி பல்கலைக்கழக மாணவர், பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா என மொத்தம் 6 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தது. அவர்கள் அனைவரும் நாக்பூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் சாய்பாபா உள்ளிட்ட 6 பேரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு, சிறையிலேயே உயிரிழந்த ஒருவரைத் தவிர, பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் மீண்டும் புதிதாக விசாரணை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை, 99 சதவீத மாற்றுத்திறனாளியான பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மற்றும் 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.