மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் “இந்தியா” கூட்டணி தலைவர்களை முடக்கும் முயற்சியில் மோடி அரசு அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது.
கடந்த 3 மாத காலமாக பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை மற்றும் சம்மன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறுத்தி வருகிறது.
இந்த துன்புறுத்தலில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை புதனன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், ஹேமந்த் சோரனை போலவே “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்ய அம லாக்கத்துறை துடியாய்த் துடித்து வருகிறது.
கைது செய்யப்போகிறோம் : தொடர் பீதியை கிளப்பும் அமலாக்கத்துறை
கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பர் மாதம் 3-ஆவது சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதிலிருந்தே கெஜ்ரிவாலை கைது செய்யப் போவதாக தகவல் அடிக்கடி வெளியாகி வருகிறது. அதாவது சம்மன் அனுப்பும் பொழுது ஒரு முறை, கெஜ்ரிவால் சம்மனை புறக்கணிக்கும் பொழுது ஒருமுறை என அடிக்கடி கைது தொடர்பான தகவலை அமலாக்கத்துறை வட்டாரங்கள் வெளியிட்டு வருகின்றன. 4-ஆவது சம்மன் அனுப்பிய போது பாஜக மூலம் வெளிப்படையாக,”அரவிந்த் கெஜ்ரிவால் எந்நேரமும் கைது செய்யப்பட லாம்” என தகவல் வெளியாகியது. ஆனால் கெஜ்ரிவால் கைது செய்யப்படாத நிலையில், தற்போது 5-ஆவது சம்மனிலும் அதே கைது செய்தி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.