india

img

2029 முதல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்!

புதுதில்லி, மார்ச் 14 - 2029-ஆம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு  ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த லாம்’ என ராம்நாத் கோவிந்த் தலை மையிலான குழு குடியரசுத் தலை வரிடம் தனது பரிந்துரை அறிக்கை யை தாக்கல் செய்துள்ளது.

நாட்டை அதிபர் ஆட்சியை நோக்கி  கொண்டு செல்லும் திட்டத்துடன், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கத்தைக் கையில் எடுத்த ஒன்றிய பாஜக அரசு, அதற்கு ஆதரவாக 22-ஆவது சட்ட ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்றது. 

பொதுமக்களின் கருத்துக்களை அறிய (!) குழு அமைப்பு
அதே வேகத்தோடு, மக்களவை யின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30  லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வ தற்காக கடந்த 2023 செப்டம்பர் 2 அன்று, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதிக்குழு தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் குபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டு இருந்தனர். 

ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், உயர்நிலைக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார். 

ஒன்றிய சட்டத் துறைச் செய லர் நிதின் சந்திரா, குழுவின் செயல ராகப் பணியாற்றுவார் என்று அறி விக்கப்பட்டது. 

இந்தக் குழு, தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள், கருத்துக்களைப் பெற்று முடிவுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. 

முன்கூட்டியே வெளியேறி விட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
முன்னதாக, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்  சவுத்ரி குழுவில் சேர்க்கப்பட்டி ருந்தார். ஆனால், குழுவில் உறுப்பின ராக தொடர விரும்பவில்லை என தெரிவித்து அவர் வெளியேறி விட்டார். 

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், புதிதாக இவர்கள் எந்த ஆலோசனை யையும் கேட்கப் போவதில்லை” என்றும் அப்போதே கூறிவிட்டார். 

இந்தப் பின்னணியிலேயே, 191 நாட்கள் ஆய்வுப் (!) பணிகளை 

மேற்கொண்டதாக கூறி, ஆய்வின் அடிப் படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்று  18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை ராம்நாத் கோவிந்த் தலைமை யிலான குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வியாழனன்று நேரில் வழங்கியுள்ளது. அதில், 2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் படுத்தலாம் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.

2029 நாடாளுமன்ற ஆயுட்காலத்தோடு சட்டமன்றங்களின் ஆயுட்காலமும் முடியும்
“ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் வகையில் அரசியலமைப்பில் சட்டத்திருத்தம் நடத்தப்படவேண்டும். 

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தை ஒருங்கிணைப்பது அவசியம். அதற்கேற்ப குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிடவேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் கூடும் நாளை நியமன நாளாக கொண்டு குடியரசுத் தலைவர் என்று அறிவிக்கை வெளியிடுகிறாரா அந்த நாளில் இருந்து ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான பதவிக் காலம் தொடங்கும்.

அறிவிக்கைக்குப் பின் நடைபெறும் தேர்தல்கள் மூலம் உருவாகும் சட்டமன்றங் களின் ஆயுட்காலம் நாடாளுமன்ற ஆயுட்காலத் துடன் முடிவடையும். 

தொங்கு சட்டப்பேரவை, ஆட்சி கவிழும் நேரங்களில் இடைத் தேர்தல்கள் நடத்திக் கொள்ளலாம். எனினும் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும்போது சட்டமன்றங்களின் ஆயுட்காலமும் முடியும். 

முதலில், மக்களவை தேர்தல்கள் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 

பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய  தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரி களுடன் கலந்தாலோசித்து தயாரிக்க வேண்டும்.

ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்த ஒரே  வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்.  ஒரே வாக்காளர் அட்டை கொண்டு வருவ தற்கும் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்று  ராம்நாத் கோவிந்த் குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பு கூறும்  கூட்டாட்சிக்கு எதிரானது
“தேர்தல் நடத்துவதை வெறும் செலவுப் பிரச்சனையாகச் சுருக்கிவிட முடியாது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போது சில  மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம்  நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேர வையின் காலம் ஐந்து ஆண்டுகள். அதேநேரம்,  அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தைச் சுட்டிக்காட்டியும் ஆளு நரும் ஆட்சியைக் கலைக்கலாம். ஆனால், ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. 

அதற்காக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சி யைக் கலைக்க முடியாது. ‘ஒரே நாடு; ஒரே  தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது என்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்தத் திட்டத்துக்காக அரசைக் கலைத்தால், தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.