உள்துறை அமைச்சகத்தின் அலட்சியத்தால் தான் புல்வாமா தாக்குதல் நடந்தது என்பதை பற்றி பொதுவெளியில் பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’தி வயர்’ இணையதள பத்திரிகைக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அளித்த பேட்டி ஒன்று நேற்று வெளியானது. அந்த பேட்டியில், புல்வாமா தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்கு சி.ஆர்.பி.எஃப் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்டபோது, உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி வழங்காததால்தான், வீரர்கள் சாலை வழியாக சென்றார்கள்; வீரர்கள் சென்ற பாதையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை; இதன் விளைவாக, புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த பிறகு, உள்துறை அமைச்சகத்தின் அலட்சியத்தால் தான் புல்வாமா தாக்குதல் நடந்தது என்பதை பிரதமர் மோடியிடம் கூறியபோது, இதைப் பற்றி பொதுவெளியில் பேச வேண்டாம் என்று மோடி கூறியதாக சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாக்கிஸ்தான் மீது பழியை சுமத்தி அரசாங்கத்திற்கும், பாஜகவிற்கும் தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதே நோக்கம் என்பதை உணர்ந்ததாக மாலிக் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கு ஊழல் நடப்பது பற்றி எந்த கவலையும் இல்லை சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். அவர் கோவாவின் ஆளுநராக இருந்தபோது, அங்கு நடந்த பல ஊழலை குறித்து மோடியிடம் தெரிவித்ததாகவும், அதனால் அவர் மேகாலயாவுக்கு மாற்றப்பட்டதாகவும், மோடி அரசு ஊழலை தடுப்பதற்கு பதிலாக அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.