india

img

தலித் எம்.எல்.ஏ அமர்ந்த இடத்தை மாட்டு சாண நீரால் கழுவிய காங்கிரஸ் தொண்டர்கள்

கேரளாவில் தலித் எம்.எல்.ஏ அமர்ந்த இடத்தை மாட்டு சாணம் கலந்த நீரால் கழுவிய காங்கிரஸ் தொண்டர்கள் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிகா தொகுதியின் எம்.எல்.ஏ கீதா கோபி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 27-ஆம் தேதி, திரிபிரயா முதல் செர்ப்பு மாநில நெடுஞ்சாலை வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி பொதுப்பணித்துறை வளாகத்தில் போராட்டம் நடத்தினார். பொதுப்பணித்துறையினர் அவரது கோரிக்கையை ஏற்றதையடுத்து, அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். 

இதையடுத்து, எம்.எல்.ஏ கீதா அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு, அங்கு வந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், எம்.எல்.ஏ போராட்டம் நடத்திய இடத்தில் மாட்டு சாணம் கலந்த நீரை தெளித்தனர். கீதா, தலித் என்பதால் அந்த இடத்தை தூய்மையாக்குவதற்காக அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சாதி பாகுபாடு பார்ப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மீது காவல்துறையில் கீதா புகார் அளித்துள்ளார். மேலும் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சபாநாயகர் ஸ்ரீ ராம கிருஷ்ணன் ஆகியோரிடமும் புகார் அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.