india

img

தில்லி: ஒன்றிய அரசை கண்டித்து முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் - தோழமைக் கட்சிகள் பங்கேற்பு

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய பாஜக அரசு தலையிடுவதை கண்டித்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தோழமைக் கட்சிகளும் பங்கேற்றனர்.
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய பாஜக அரசு அத்துமீறி தலையிடுவதை எதிர்த்தும், மாநிலங்களின் செயல்பாடு மற்றும் நிதி சுயாட்சி மீது ஒன்றிய அரசின் பாகுபாடு மற்றும் வன்மம் மிகுந்த தாக்குதலைக் கண்டித்தும் இன்று புதுதில்லியில் கேரள அரசு மாபெரும் போராட்டத்தை நடத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேரளா இல்லத்தில் தொடங்கிய கண்டன ஊர்வலம் ஜந்தர் மந்தரில் நிறைவடைந்தது. இப்போராட்டத்தில், தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். 
இக்கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலங்களின் யூனியனான கருதப்படும் ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிரான ஜனநாயகமற்ற அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனை கண்டித்தும்,  சமநிலையை மீட்டெடுக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மாநிலங்களின் நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்வதால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக எங்களின் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யவும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்கவும் இன்று தில்லியில் அவர்கள் ஒன்றுகூடியதாகவும் அவர் தெரிவித்தார்.