அமெரிக்காவுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை முற்றிலும் நிறுத்தப்படுவதாக ஒன்றிய தகவல்தொடர்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்தியப் பொருள்கள் மீது 50% வரி விதிப்பின் எதிரொலியாக ஆக. 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்தது. 100 டாலர் வரையுள்ள பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அவை மட்டும் அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு அஞ்சல் எடுத்துச் செல்வதில் வரி விதிப்பு நடவடிக்கைகளால் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், அனைத்து வகை அஞ்சல் சேவையும் நிறுத்தப்படுவதாகவும் இந்திய அஞ்சல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, முன்பதிவு செய்துள்ளவர்கள் தபால் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.