india

img

‘முதல்வர்களை அறிவிக்காதது ஏன்?’

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் பாஜக வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் புதிய முதல்வர்கள் அறிவிக்கப் படாதது குறித்து அக்கட்சியின் ஒழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என ராஜஸ்தான் காபந்து முதல்வர் அசோக் கெலாட் (காங்கிரஸ்) கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,”தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகிறது. ஆனால் பாஜகவால் இன்னும் மூன்று மாநிலங்களுக்கான முதல்வர்கள் யார் என்பதை அறிவிக்க முடியவில்லை. இதன்மூலம் அக்கட்சிக்குள் ஒழுக்கம் இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. இதே விஷயத்தை காங்கிரஸ் கட்சி செய்திருந்தால் பல்வேறு குற்றச்சாட்டுகளை எல்லாம் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தியிருப்பார்கள். ராஜ்புத் சமூக தலைவர் கோகமேடி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆட்சேபம் இல்லை என்ற ஆவணத்தில் நான் கையெழுத்திட வேண்டி இருந்தது. அதில் புதிய முதல்வர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்” என்றார்.

மதவெறிப் பிரச்சாரம்
முதல்வர் அசோக் கெலாட் மேலும் கூறுகையில், “பாஜகவினர் மதப் பிரச்சனைகளை எழுப்பி ராஜஸ்தான் மக்களை பிரித்தார்கள். முத்தலாக், அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து, கன்னையா லால் கொலை போன்றவற்றுடன் முஸ்லிம்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது, இந்துக்களுக்கு ரூ.5  லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது என்று பொய்யாக பிரச்சாரம் செய்தார்கள்”எனக் கூறினார்.