அரவிந்த் கெஜ்ரிவாலை தில்லி முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்.
மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் 8 நாட்களாக தில்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை தில்லி முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அல்லது தில்லி துணை நிலை ஆளுநர் தான் முடிவெடுக்க முடியும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்.