தில்லி படேல் சவுக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மீது தில்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தில்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மோடி அரசின் அமலாக்கப் பிரிவால் அராஜகமான முறையில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தச் சென்ற அக்கட்சியினரை படேல் சவுக் பகுதியில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்துகொண்டிருந்த புகைப்பட பத்திரிகையாளர்கள் மீதும் தில்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தில்லி காவல்துறையினர் தாக்கியதில் இந்துஸ்தான் ஊடகத்தைச் சேர்ந்த சல்மான் அலிக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா டுடே பத்திரிகையாளர் அருண் தாக்குரை ஒரு காவல்துறை அதிகாரி, கழுத்தை நெரிக்கும் புகைப்படமும் வெளியாகி உள்ள நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.