india

img

வங்கக்கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்  

இந்த ஆண்டின் முதல் புயலான அசானி அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே நாளை உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது கிழக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று(மார்ச் 20 ஆம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை(மார்ச் 21 ஆம் தேதி) அசானி புயலாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.    

இது கிட்டத்தட்ட வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு மியான்மரின் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரையை மார்ச் 22 அன்று அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தமான் - நிகோபர் தீவுகளில் கனமழையும் நிகோபர் தீவின் சில பகுதிகளில் அதிதீவிர கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் இன்று காலை 8.30 மணிக்கு  மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கார் நிகோபாருக்கு (நிகோபார் தீவுகள்) வட-வடமேற்கே சுமார் 110 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 21 ஆம் தேதி காலை 5.30க்கு புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதையடுத்து அந்தமான்-நிகோபர் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் நேற்று முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்காரணமாக சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.