தில்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் தில்லியில் நேற்று ஒரேநாளில் 7486 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 503084 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 131 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 7943 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் ரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல என்றும், இது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், டெல்லி அரசு தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார். பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி முக கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.