பாதுகாப்பு பணிக்காக காஷ்மீருக்கு சென்ற பி.எஸ்.எஃப் வீரர்களை மோசமான ரயிலில் அனுப்பிய விவகாரத்தில் 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரையையொட்டி பாதுகாப்பு பணிக்காக திரிபுராவில் இருந்து காஷ்மீர் சென்ற பிஎஸ்எஃப் வீரர்களுக்கு, சிறப்பு ரயில் என்ற பெயரில் மிக மோசமான நிலையில் உள்ள ரயிலை அனுப்பிய விவகாரம் தொடர்பாக 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் அலிப்பூர்துவாரின் பயிற்சி டிப்போ அதிகாரி மற்றும் அலிப்பூர்துவார் பிரிவின் மூன்று மூத்த பிரிவு பொறியாளர்கள் அடங்குவர்.
அசுத்தமான கழிவறைகள், கிழிந்த இருக்கைகள், சேதமடைந்த கதவு மற்றும் ஜன்னல்களுடன் இருக்கும் இந்த ரயிலின் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரயில்வேத் துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.