india

img

கோவாக்சின், கோவிஷீல்டு கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்... ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்...

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசியான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) நடத்திய  ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த  தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றங்களின் தலையீட்டிற்குப் பிறகே அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க ஒன்றிய பாஜக அரசு முன்வந்தது. 

இந்தியாவில் தற்போது 50 கோடிபேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் மூன்றில் இருவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒருவருக்கு முதல் டோஸில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினால், இரண்டாவது டோஸிலும் கோவாக்சின் தடுப்பூசிதான் செலுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.முதல் டோஸில் ஒருவர் கோவாக்சின் தடுப்பூசியும், இரண்டாவது டோஸில் கோவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்துவதால், ஏதேனும் பக்கவிளைவுகள் வருமா, வேறு ஏதாவது உடலில் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில்  சில இடங்களில் தடுப்பூசி மாற்றிப்போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஐசிஎம்ஆர் இதுகுறித்து ஆய்வு செய்தது. 

கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனிகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் பாதுகாப்பானது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்று ஐசிஎம்ஆர்  ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அடினோ வைரஸ் அடிப்படையைக் கொண்ட கோவிஷீல்டு தடுப்பூசியை ஒரு டோஸாகவும், செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ் மூலம் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மருந்தை இரண்டாவது டோஸாகவோ கலந்து பயன்படுத்துவதால், சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழு, கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகளை கலந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுசெய்யவும் பரிந்துரை செய்திருந்தது.இதையடுத்து, தமிழகத்தில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி இரு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்துவது குறித்த ஆய்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழுவினர் தரப்பில் கூறுகையில்“இந்த ஆய்வு என்பது ஒருவர் முதல் டோஸில் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசியும் இரண்டாவது டோஸில் வேறு தடுப்பூசியும் செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த வேலூர் சிஎம்சி கல்லூரிக்கு அனுமதியளி்க்கப்பட்டது. இதில் 300 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மூலம் 4 கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இரு தடுப்பூசிகளையும் கலந்து பரிசோதனை நடத்தப்பட்டது”என்று தெரிவித்துள்ளனர்.

;