விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனம் உள்ளது. ஆவியூரை அடுத்த கடம்பன்குளத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. குவாரியில் வழக்கம்போல இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குவாரியில் உள்ள வெடிமருந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கந்தசாமி (47), கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியதுரை (25), குருசாமி (60) ஆகிய மூவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். வெடிவிபத்தின் அதிர்வு காரணமாக கடம்பன்குளத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கல்குவாரியில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. மேலும் அங்கு நின்றிருந்த 4 வாகனங்கள் சேதமடைந்ததுடன், குவாரியில் வேலை பார்த்த மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஆவியூர் மற்றும் கடம்பங்குளம் சுற்றுவட்டார கிராம மக்கள் கல்குவாரிக்கு எதிராக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிவிபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புப் படையினரும் உடனடியாக கல்குவாரிக்குள் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்புப் படையினர் கல்குவாரிக்குள் சென்று காயம்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, குவாரி விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குவாரி உரிமையாளர் சேது உள்பட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், குவாரி உரிமையாளர் சேதுவை காவல்துறையினர் கைது செய்தனர். மற்ற 3 பேரை காவல்துறையினஎ தேடி வருகின்றனர்.