சிறுபான்மையினருக்கு எதிரான தலையங்கம் எழுதிய செய்தித்தாளை ரயில்களில் விநியோகம் செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு – சென்னை சதாப்தி விரைவு ரயிலில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22), சிறுபான்மையினருக்கு எதிரான தலையங்கம் மற்றும் செய்திகள் கொண்ட “தி ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்” செய்தித்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தித்தாளின் தலையங்கத்தில், “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை அங்கீகரிக்க வேண்டும்.” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், மற்றொரு தலைப்புச் செய்தியில், “ஹிட்லரைப் போல ஔரங்கசீப்பை இனப்படுகொலை செய்தவர் என ஐ.நா அறிவிக்க வேண்டும்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலின சமத்துவ ஆர்வலர் கோபிகா பஷி அவரின் ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை நான் பெங்களூர்-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏறினேன், மற்ற எல்லா இருக்கைகளிலும் இந்த அப்பட்டமான பிரச்சார செய்தித்தாளான ‘தி ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ்’ இருந்தது. இதுவரை இந்த செய்தித்தாளை நான் கேள்விப்பட்டதே இல்லை. இதை ஐஆர்சிடிசி எப்படி அனுமதிக்கிறது?” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி செய்தித் தொடர்பாளர் ஆனந்த ஜா, “நாங்கள் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம், மேலும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஐஆர்சிடிசி-அங்கீகரிக்கப்பட்ட வெளியீடுகளில் இந்தத் செய்தித்தாள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், “அங்கீகரிக்கப்படாத செய்தித்தாள் ரயிலுக்குள் எப்படி நுழைந்தது என்பது தொடர்பாக பெங்களூரு ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ரயில் பெங்களூரு கோட்டத்திற்கு சொந்தமானது என்பதையும், சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றது என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.