india

அமைச்சர்கள் மீதான விசாரணை : உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுதில்லி,செப்.6- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இருவரும் வருமானத்துக்கு  அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.  அமைச்சர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதிடுகையில், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நடைமுறை சரியல்ல என வாதிட்டனர். இதையடுத்து, அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.