உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்திய கடவுள்தான் தன்னை தூண்டினார் என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்றார். அப்போது, நீதிமன்ற பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை தடுத்து அவரை வெளியேற்றினர். வெளியே சென்றபோது, ‘சனாதன தர்மத்தை அவமதித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என அந்த நபர் கூச்சலிட்டபடி சென்றார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் 7 அடி உயரமுள்ள விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணையில், தலைமை நீதிபதியின் கருத்துக்களால் அவர் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து “இதிலெல்லாம் நாம் நமது கவனத்தை சிதறவிடக் கூடாது, இது என்னை எவ்விதத்திலும் பாதிக்காது” என தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்திய கடவுள்தான் தன்னை தூண்டினார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதை செய்தால் நான் சிறைக்குச் செல்வேன், அங்கே துன்பப்பட வேண்டியிருக்கும் என்று எல்லா விளைவுகளையும் யோசித்தேன். ஆனால் கடவுளின் பெயரில் இதை செய்தேன். ஏனென்றால் கடவுள் என்னை இதையெல்லாம் செய்யத் தூண்டினார்" என ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.