கோவையில் வியாழனன்று (அக்.9) திறக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், 2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை, நமது அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் (அக்.9) மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.