india

img

ஹல்திராம் உணவு பண்டங்களில் உருது எழுத்துகள்- அத்து மீறிய சுதர்சன் தொலைக்காட்சி செய்தியாளர்

ஹல்திராம் உணவு பண்டங்களில் உருது எழுத்துகளும் அச்சிடப்பட்டிருப்பதால் ஆத்திரம் அடைந்து கடை மேலாளருடன் வலதுசாரி ஊடகமான சுதர்சன் தொலைக்காட்சியின் செய்தியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


பிரபல நொறுக்கு தீனி நிறுவனமான ஹல்திராம் 1941ம் ஆண்டு தொடங்கபட்ட பழமையான  நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் உணவு பண்டங்களில் பாக்கெட்டுகளில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆங்கிலம், இந்தி, உருது மொழியில் விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தில்லியில் ஹல்திராம் நிறுவனத்தின் உணவு பாக்கெட்டுகளில் உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது தொடர்பாக சுதர்சன் தொலைக்காட்சி செய்தியாளர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 
உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் உருது மொழியில் ஏன் அச்சிடப்பட்டுள்ளது என்று அவர் எழுப்பிய கேள்விக்கு கடை மேலாளர், " எங்கள் தயாரிப்புகளில் ஹிந்தி, ஆங்கிலம், உருது ஆகிய 3 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த மொழிகளை அறிந்தவர்கள் அதை படித்து அந்த உணவை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார். 
ஆனால் அவரது பதிலை பொருட்படுத்தாத செய்தியாளர் எதை உருதுவில் எழுதி உள்ளனர். நவராத்திரியின் போது உருதுவில் எழுதியிருப்பது இந்துக்களுக்கு துரோகம் செய்வதாகும். மிருகங்களின் எண்ணெய்யில் செய்யப்பட்டதா, மாட்டு கொழுப்பில் சமைக்கப்பட்டதா என பிரச்சனையை தூண்டும் வகையில் கேள்வி எழுப்பினார். 
சுதர்சன் தொலைக்காட்சி செய்தியாளரின் அத்து மீறிய நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மேலாளார், "உங்களுக்கு வேண்டுமெனில் வாங்குங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள். தேவையற்ற சர்ச்சைகளை ஹல்திராம் ஒருபோதும் ஊக்குவிக்காது என்றார். இதுகுறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரயில் நிலைய அறிவிப்பு பலகைகள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றில் கூடதான் உருது இடம்பெற்றுள்ளது அதை அந்த செய்தியாளர் புறக்கணிப்பாரா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். 
ஏற்கனவே இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை வெளியிட்டதால் சுதர்சன் தொலைக்காட்சி தணிக்கை செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி சந்திரசூட் அரசு வேலைகளில் இஸ்லாமிய சமூகங்கள் ஊடுருவ சதி செய்கிறது என்ற சுதர்சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்கும் நயவஞ்சகமானது மற்றும் வெறித்தனமானது என்றார். மேலும் நான் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை பார்த்தேன். பல காட்சிகள் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது என்று நீதிபதி இந்து மல்கோத்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.