india

img

ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி.நேரில் வாழ்த்து.....

புதுதில்லி:
ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  ஆகஸ்ட் 12 வியாழக்கிழமையன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியை பறக்கவிட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண்வீரர்கள். வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார் கள். இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர உழைத்த பெண்களில் ஒருவருக்கு இங்கு கிடைத்த வெகுமதி சாதிரீதியான இழிவு.

வந்தனா கட்டாரியா – இந்தியாவின் ஒலிம்பிக் நம்பிக்கை. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய பெண். காலிறுதி போட்டியில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெறவழிவகுத்த ஆட்டம் அது. ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியின் பொருட்டு, தந்தையின்  இறுதிச் சடங்குக்கு செல்லாமல் விட்ட வந்தனாவுக்கு கிடைத்ததெல்லாம் சாதி துவேஷம். அவரைப் போன்ற தலித் பெண்கள்இடம் பெற்றதால்தான் தோல்வி என்று கொக்கரித்தது ஒரு கூட்டம். குடும்பத்தை விட நாடு முக்கியம் என்று நினைத்து பயிற்சியில் பங்கெடுத்த வந்தனா ஒரு பக்கம், தேசத்தை விட சாதி உயர்வானது என்று நினைத்து தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய கீழ்த்தரமான கூட்டம் இன்னொரு பக்கம். இதில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும்? குற்றவாளிகளை கைது செய்ததோடு மட்டும் நிற்காமல், இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த உங்கள் பக்கம்தான் நிற்கிறோம்என்கிற வலிமையான செய்தியை இந்தியா சொல்லியிருக்க வேண்டாமா? விளை யாட்டுத்துறை அமைச்சர் நேரில் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் நிலைக்குழு உறுப்பினர் என்றமுறையிலும் இன்று (வியாழன்) வந்தனா கட்டாரியாவை உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில் ரோஷ்னாபாத் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். நான் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் எனது சார்பிலும்  வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் இந்தியாவுக்கு தேடித்தந்த மகத்தான பெருமைக்கு நன்றி சொல்லி திரும்பியிருக்கிறேன். அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவை தந்தது. அவர்இன்னும் பெரிய உச்சங்களை தொடுவார் என்கிற நம்பிக்கையை தந்தது .

வந்தனா, இந்தியாவின் மகள். அவரது வெற்றி இந்த தேசத்தின் வெற்றி.

இதுதான் வந்தனாவுக்கு நான் சொன்ன சேதி.

வாழ்த்துகள் வந்தனா!

காலம் உங்கள் கைகளில்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.