புதுதில்லி, மார்ச் 10- தேர்தல் பத்திரங்கள் ஊழலில் பாஜகவிற்குத் துணை போகும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சிக்கியுள்ளது. எஸ்பிஐ தன்னிடமுள்ள அனைத்துத் தரவுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை மக்களவைத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாமென ‘அரசியலமைப்பு நடத்தைக் குழு’ என்ற (சிசிஜி) The Constitutional Conduct Group பதாகையின் கீழ் திரண்டுள்ள முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது. தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் மார்ச் 6-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டுமென எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டது. ஆனால், எஸ்பிஐ தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை வெளியிட ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு மார்ச் 4-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசியலமைப்பு நடத்தைக் குழு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், “ 48 கோடி கணக்குகளைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மட்டுமல்ல டிஜிட்டல் மயமாக்கலில் முதன்மை வங்கி என்ற பெருமையைப் பெற்ற எஸ்பிஐ-யில் அனைத்துக் கணக்குப் பதிவுகளும் முறையாக பாரமரிக்கப்படுகிறது.
ஆனால், தேர்தல் பத்திர தரவுகளை கொடுப்பதற்கு அந்த வங்கி கூறியுள்ள சாக்குப்போக்குகள் “பரிதாபகரமாக” உள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் அரசியலமைப்பு நடத்தைக் குழு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது. அதாவது, “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்துவதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.60 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ஒன்றிய அரசிடம் எஸ்பிஐ கேட்டுள்ளது.
அப்படியிருந்ததும் கால அவகாசம் ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பத்திரம் திட்டம் இறுதி செய்யப்பட்ட நேரத்தில், ஒன்றிய நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க், “ தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைப் பெற பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது எனக் கூறியதையும் மேற்கண்ட உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுத் தேர்தலுக்கு முன்பு தரவுகளை வழங்குவது சிரமம் என எஸ்பிஐ கூறுவது, சில நிறுவனங்களையும், அரசியல் கட்சிகளையும் பாதுகாப்பதற்குத் தான்.
குறிப்பாக தற்போது மத்தியில் அதிகாரத்திலுள்ள அரசை எஸ்பிஐ வங்கி பாதுகாக்கிறது என்றும் அக்குழு விமர்சித்துள்ளது. தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி வரை உள்ளது என்பதை அறிவோம், தேர்தலை சரியான நேரத்தில் முடிக்க, தேர்தல் ஆணையம் மார்ச் 27- ஆம் தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னதாகவே எஸ்பிஐ தனது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் மோசடி- பரிவர்த்தனையில் எஸ்பிஐ தன்னிடமுள்ள அனைத்துத் தரவுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை மக்களவைத் தேர்தல் தேதிய அறிவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். நம்பிக்கையை இழக்கும் எஸ்பிஐ எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கை குறித்து தீக்கதிர் செய்தியாளரிடம் பேசிய அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ, மக்கள் எப்போதும் எஸ்பிஐ வங்கியை நம்பினர்.
ஆனால் அந்த நம்பிக்கை இப்போது அழிந்து வருகிறது. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு (அதானி) பெரும் கடன்கள் வழங்கப்பட்டபோதே எஸ்பிஐ மீதான நம்பிக்கை அரிக்கப்பட்டுவிட்டது. மற்றொரு கார்ப்பரேட் நிறுவனம் (அனில் அம்பானி) பெரிய அளவில் கடன்களை நிலுவையில் வைத்திருந்தது. ஒரு நாள் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது நிறுவனத்தை அவரது சகோதரர் (முகேஷ் அம்பானி) வாங்கினார். இவை அனைத்திலும் முன்னணி வங்கியாக எஸ்பிஐ உள்ளது.
நிர்வாகத்தால் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று, எஸ்பிஐ பல தொலைக்காட்சி விவாதங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது” என்றார். தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை வழங்குவதற்கு இந்த டிஜிட்டல் உலகில் அதிக நேரம் தேவைப்படாது. பிப்ரவரி 15-ஆம் தேதி உத்தரவு வெளியானது. ஆனால், 20 நாட்களாக எஸ்பிஐ என்ன செய்து கொண்டிருந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.