india

img

தேர்தல் ஆணையர் நியமன மசோதா சட்டமானால் அதை ரத்து செய்ய வேண்டும்

புதுதில்லி, டிச. 16 - தெற்கு மும்பையில் நடைபெற்ற ‘பன்சாரி  சேத் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் பங்கேற்று உரை யாற்றினார். அப்போது, நாட்டின் நிகழ்ச்சிப் போக்குகளில் இந்த ஆண்டு தனக்குக் கவலையளித்த விஷயங்கள் குறித்து பாலி நாரிமன் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“இந்த நாட்டில் சமீப காலங்களில் நடந்த (‘பிபிசி இந்தியா’ அலுவலகங்கள் மீதான சோதனை, தேர்தல் ஆணையர் நியமன மசோதா, ஆளுநர்களின் தன்னிச்சைப் போக்கு, அரசியலமைப்புப் பிரிவு 370  தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு’  போன்ற) நிகழ்வுகள் மிகவும் கவலை யளிக்கின்றன. 

கூட்டாட்சிக்கு எதிரான தீர்ப்பு
குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-இன் செல்லுபடி குறித்த உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பு குழப்பத்தை அளிக் கிறது. இந்த தீர்ப்பு கூட்டாட்சியின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. 

இந்த தீர்ப்பில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட தருணத்தை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெ னில், அந்த சமயத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மேலும், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது கவலை யளிக்கிறது.

யூனியன் பிரதேசமாக்கிய சூழ்ச்சி
ஜம்மு - காஷ்மீரில் ஐந்து ஆண்டுகளாக ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு இயந்திரத்தின் முறிவு பற்றி அரசியலமைப்பின் 356-ஆவது பிரிவின் கீழ் உள்ள விதிகள் பேசுகின்றன. இந்த விதிகளின்படி, தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்படாதவரை, மாநிலத்தில் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் கூறாதவரை, ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஓராண்டுக்கு மேல் நீட்டிக்க முடியாது. அரசியலமைப்பு பிரிவு 356(5)-இல் இதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதன் மூலம் இந்த நிபந்தனையை ஒன்றிய அரசு  சூழ்ச்சிகரமான முறையில் கடந்து சென்றுள்ளது. 

சொலிசிட்டர் ஜெனரலுக்கு அதிகாரமில்லை
ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று தற்போது இந்திய சொலிசிட்டர் ஜெனரல் அளித்த உறுதி மொழியின் பேரில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதைத் தவிர்த்து ள்ளது. 2024 மே மாத வாக்கில், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியிருக்கிறார். அவ்வாறு உறுதியளிப்பதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனென்றால், மாநில அந்தஸ்தை வழங்குவது, நாடாளு மன்றம் சட்டமியற்ற வேண்டிய விஷய மாகும். எனவே, நாடாளுமன்றத்தை தனது வாக்குறுதியில் பிணைக்க அவருக்கு அதிகாரம் இல்லை.

இந்த தீர்ப்புக்கு எதற்கு 4 ஆண்டுகள்?
அவ்வாறான ஒரு விஷயத்தில், ‘நாங்கள்  முடிவு செய்ய மாட்டோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது என்றால், அரசிய லமைப்பு பிரிவு 356(5) கூறும் விதிகளை புறக்கணித்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான செயல்பாடு காலவரையின்றி தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள் ளது என்றே அர்த்தம். இந்த விவகாரத்தில் இத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கு ஏன், உச்ச  நீதிமன்றம் நான்கு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது என்ற கேள்வியும் எழுகிறது.

ஊடகங்களின் கழுத்தை நெரிக்க அனுமதிக்கக் கூடாது
ஊடகங்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடக்கும் தருணத்தில், நீதிமன்றங்கள் அவற்றை உடனடியாக தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும். சுதந்திரமான ஊடக அறிக்கைக்காக மட்டுமே (‘இந்தியா : மோடி என்ற கேள்வி’ ஆவணப்படத்திற்காக பிபிசி  மீது) வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுமானால், அது சட்டவிரோத மானது; அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றங்கள் கூற வேண்டும். ஊடகத்தையும் இந்த நாட்டையும் நீங்கள் பாதுகாக்கும் ஒரே வழி இதுதான். இந்த நாட்டின் கண்காணிப்பு பொறிமுறையாக ஊடகங்கள் இருக்கின்றன. அவ்வாறான ஊடகங்களையும் கழுத்தை நெரித்து கொல்வதற்கு அனுமதி அளித்தோமானால், இங்கே எதுவும் எஞ்சியிருக்காது. 

‘தேர்தல் ஆணையர் நியமன மசோதா’வை ஏற்கக் கூடாது
நாடாளுமன்றம் சட்டமியற்றும் வரை, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலை வர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்ட நிலையில், மிகவும் துரதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக, பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு அமைச்சர் மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் ஷரத்துக்களுடன் மசோதா கொண்டுவரப்பட்டு உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும்  பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) மசோதா, 2023, டிசம்பர் 12 அன்று  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள் ளது. ஒருவேளை இது சட்டமானால், இந்த முறையில்தான், தலைமைத் தேர்தல்  ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணை யர்களை நியமிக்கப் போகிறார்கள் என்றால், அந்த சட்டத் திருத்தத்தால் தேர்தல் ஆணை யத்தின் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப் படும். அதை நீக்கவில்லை என்றால், அது ஜன நாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறும். எனவே, உச்சநீதிமன்றம் இந்த சட்டத்திருத்தத்தைத் தன்னிச்சையானது என  அறிவித்து ரத்து செய்ய வேண்டும். 

சட்டப்பேரவையின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி
கேரளத்தின், சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை, 23 மாதங் களாக, முடிவெடுக்காமல் ஆளுநர் முடக்கி வைக்கிறார். கடைசியில், உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு எட்டு மசோதாக்களில், ஏழு  மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். ஒரே ஒரு மசோதா வுக்கு மட்டும் ஒப்புதல் கிடைத்தது. இது ஒரு மிகவும் கவலைக்குரிய விஷயம். அனைத்து மசோதாக்களையும் ஆளுநர்கள், குடி யரசுத் தலைவரிடம் அனுப்பி விட்டால், சட்டப் பேரவைகளின் சட்டம் இயற்றும் அதிகாரமே முடங்கிவிடும்.

மசோதாக்களை மரணிக்கச் செய்யும் ஏற்பாடு
ஆளுநர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவது போல் அல்ல, குடியரசுத் தலை வருக்கு அனுப்புவது. திரும்பிய மசோதா  சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப் பட்டால், அதை ஆளுநர் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால் இங்கு மசோதாக்கள் ஒட்டுமொத்தமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் மாநில  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் கள் ஒன்றிய அரசின் வாசலைச் சென்றடை கின்றன. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தால், அந்த மசோதாக்கள் மரணித்துப் போனது போல் ஆகிவிடுகிறது.  

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை குடியரசுத் தலை வரின் பரிசீலனைக்கு அனுப்பிய கேரள ஆளு நர் ஆரிப் முகமது கானின் செயல், அரசி யலமைப்புப் பிரச்சனையை ஏற்படுத்தும் நட வடிக்கை. இது இந்த ஆண்டின் மிகவும் கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகும்.இவ்வாறு ரோஹிண்டன் பாலி நாரிமன் பேசியுள்ளார்.