india

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பும்... இறப்பும் அதிகம்

ஒவ்வொரு ஆண்டும் பிப்.4-ஆம் தேதி உலக புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டில்  இந்தியாவில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புற்று நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம்  ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சரியாகக் கணக்கிட்டால் 14,13,316 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,16,827 பேர் உயிரிழந்துள்ளனர்.

மார்பகம் (27  சதவீதம்) மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் களால் (18 சதவீதம்) பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிறுவனம், உலகம் முழுதும் உள்ள 115 நாடுகளில் உள்ள புற்றுநோய் பாதிப்புகள், சிகிச்சை மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு  நடத்தியுள்ளது.

பெரும்பாலான நாடுகள்  புற்றுநோய் மற்றும் நோய்த்தடுப்பு (வலி தொடர்பான) பராமரிப்பு  சேவைகளுக்கு போதுமான அளவில் நிதி யளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆண்கள் உதடு மற்றும் வாய்வழி குழி மற்றும் நுரையீரல் புற்றுநோய்களால் பொது வாக பாதிக்கப்படுகின்றனர். இதில் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் 8.5 சதவீதம் என  உலகச் சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறு வனம் தெரிவித்துள்ளது.

 இந்தியாவில் ஒருவர் 75 வயதை அடை வதற்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்து 10.6 சதவீதம். இவர்களில் உயிரிழப்போர் 7.2 சதவீதம் ஆகும்.  உலகளவில், 75 வயதை அடைவதற்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆபத்து 20 சதவீதம். உயிரிழப்பு 9.6 சதவீதம். ஒப்பீட்டள வில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகம். உலக சுகாதார நிறுவனம் 2050-ஆம் ஆண்டில் 5.50 கோடிக்கும் அதிமானோர் புற்று நோயால் பாதிக்கப்படுவர் என கணித்துள்ளது.

இது 2022-ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் 77 சதவீதம் அதிகம். புகையிலைப் பயன்பாடு, மது அருந்துதல் மற்றும் உடல் பருமன் ஆகியவை புற்று நோயின் அதிகரிப்புக்கு முக்கியக் காரணிகள்  என்று புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  புற்றுநோயைத் தடுக்க 90 சதவீத சிறுமிகளுக்கு 15 வயதுக்கு முன்பே  பாப்பி லோமா வைரஸ் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்த வேண்டும், 70 சதவீத பெண்கள் 35 வயதிலும், 45 வயதிலும் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.  

ஒவ்வொரு நாடும்  2030-ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய்த் தடுப்பு இலக்கை அடைய வேண்டும், அடுத்த நூற்றாண்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை முழுமையாக அகற்ற வேண்டும். அதற்கான பாதையில் பயணிக்க வேண்டுமென என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஈரோடு

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தில் உள்ளதாக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை  ஒட்டி, புற்று நோய் விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய புற்று நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகேஸ்வரன், இந்தியாவில் புற்றுநோய்கள் அதிகம் பாதித்த மக்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் புற்றுநோய் அதிகம் கொண்ட மாவட்டமாக முதலிடத்தில் உள்ளது.  

புகையிலை, மது, சரியான உடற்பயிற்சி யின்மை, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் புற்றுநோய் வருகிறது. கடந்த காலங்களில் 40 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தற்போது 20 வயதிலேயே புற்றுநோய் ஏற்படுகிறது.

அதில் 50 முதல் 60 சதவீத மக்கள் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தை எட்டிய பின், காலதாமதமாகத்தான் புற்றுநோய் பாதிப்பை அறிகிறார்கள். முற்றிய நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே புற்று நோயை கண்டறிவது அவசியம்” என்றார்.