headlines

img

வெல்லப் பேச்சு விஷம்!

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்களது மதங்களைக் கடந்து ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் பொது சிவில் சட்டம் குறித்துப் பேசியிருக்கிறார். பொதுவாக பிரதமர் மோடி யோ, அமைச்சர் அமித்ஷாவோ செய்தியாளர் களையே சந்திப்பதில்லை.ஆனால் அண்மைக் காலத்தில் இருவரும் ஊடக நிகழ்ச்சிகளில் பேசி விஷங்களை விதைக்கிறார்கள்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறும் அமித்ஷா - ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பல ‘ஒரே’ அணி வகுப்பில் நாட்டை மூழ்கடிக்க முயற்சிப்பதேன்? 

ஆனால் பேசும் போது மிகச் சாமர்த்திய மாக, மிகவும் பொதுவான மனிதர்கள் போல் காட்டிக் கொள்வதும் விஷத்தை வெல்லம் தடவி மக்கள் வாயில் திணிக்க முயற்சிப்பதும் தான் அவர்களது வழக்கம். அப்படித்தான் பொது சிவில் சட்டம், 1950 முதல் விவாதத்தில் உள்ளதாக வும் பாஜக அதற்காக போராட்டம் நடத்தி யுள்ளது என்றும் கூறுகிறார்.

அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்திலேயே நிராகரிக்கப்பட்ட பல விஷயங் களையும் மீண்டும் அரங்கேற்றவே இப்படி வாய்ஜாலம் காட்டுகிறார்.

அனைவருக்கும் பொதுவாக குற்றவியல் சட்டம் உள்ளது. சிவில் சட்டம் என்பது பல்வேறு மதங்களை, இனங்களை, மொழிகளைக் கொண்ட மக்களது வாழ்வியல் நடைமுறைகள் சார்ந்தவை என்பதால்தான் ஒரே சட்டமாக உருவாக்கவில்லை நம் முன்னோடிகள். பிறப்பு  முதல் இறப்பு வரை திருமணம், மண முறிவு, சொத்துரிமை, தத்துரிமை என பல விஷயங்களி லும் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன.

இந்து மதத்தில் பிராமணிய பழக்க வழக்கங் கள், சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. மற்ற மதத்தினருக்கு அப்படியல்ல. அதனால் தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் சூழலும் நிலைமையும் ஏற்படவில்லை. ஆனால் இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் மதச் சிறுபான்மையினரை அழித்தொழிக்கும், அடக்கியாளும் விதமாகவே இதைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.

பாஜக ஆட்சி நடக்கும் உத்தரகண்ட், பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது போல் மற்ற மாநிலங்களிலும் நிறைவேற்றப்படும் என்று அமித்ஷா கூறுவதன் மூலம் மதரீதியிலான அணிதிரட்டலை மனதில் வைத்தே தற்போது  - தேர்தல் ஆதாயத்துக்காகப் பேசியிருக் கிறார். இவர்களது கெடு முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். அதற்கு வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். அதுவே நயமாகப் பேசி நஞ்சை விதைக்கும் நயவஞ்சகக் கூட்டத்துக்கு பதிலடியாக அமையும்.