கடந்த 26ஆம் தேதி புதுதில்லியில் நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாராயண குரு முற்போக்கு சிந்தனையாளர் சமூக தீமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர், சாதி பாகுபாடுகளுக்கு எதிராக தர்க்கரீதியாகவும், நேரடியாகவும் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றவர் என்று கூறினார். உண்மைதான். அவரது சிந்தனை களையே எனது அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்று கூறியது அனர்த்தம்.
நாராயண குரு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே தெய்வம் என்ற கொள்கை அடிப்படையில் மனிதர்களின் சமத்துவத்திற்காக சமர்புரிந்தவர். ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் அதன் தலைவர்களும் சனாதன தர்மம் என்கிற அநீதி யான, நால்வருண சாதி அமைப்பை நிலைநிறுத்து வதற்கே வேலை செய்பவர்கள். இந்த நிலையில்தான் மோடியின் பேச்சு நகைக்கத்தக்க தாக உள்ளது. இவர்களது சித்தாந்தத்திற்கு எதிர் கருத்து கொண்டவர்களைக் கூட தங்களது கருத்துக்கு ஆதரவானவர்கள் போல பேசுவது இவர்களின் வழக்கம். கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்மையும் கலந்து உண்மை போலவே பேசுவது இவர்களது நடைமுறை.
அந்த வழிமுறையின்படியே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஞாயிறன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில், சமூகத்தில் நல்லிணக்கத்தை உரு வாக்குவதற்காக காந்திய வழியில் வினோபாவே யுடன் இணைந்து தனது வாழ்நாள் முழுவதும் செயல்பட்டவர் நிர்மலா தேஷ்பாண்டே என்று கூறியுள்ளார். ஆனால் இவர்களது ஆட்சியின் நல்லிணக்கத்தை தில்லியின் ஜஹாங்கீர்புரியில் அண்மையில் கண்டோமே!
தொடர்ந்து பேசும்போது, அடித்தட்டு மக்க ளின் சமூக உரிமைகளை நிலைநாட்ட காந்திய விழுமியங்கள், அவரது வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த வேண்டும் என்று கூறியதோடு, ஒற்றுமை, அரசியல் உறுதித் தன்மை, பொருளாதார வளர்ச்சி, தீண்டாமை- பாகுபாடற்ற நிலை கொண்ட நாட்டை உருவாக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டார் என்று கூறிவிட்டு ஆட்சி அதிகாரத்துக்காக முன் நிறுத்தப்படும் உத்திகளில் ஒன்றாக தீண்டாமை அரசியல் மாறிவிட்டது என்று ஆளுநர் கூறி யுள்ளார்.
தீண்டாமை என்பது இந்து மதத்தின் கோர முகத்தின் வெளிப்பாடு. அதனால் பாதிக்கப்பட்ட வர்கள் சமநிலைக்காக போராடுவதையே அரசியலை முன்னிறுத்தி செய்யப்படும் உத்தி என்கிறார்.
அத்துடன் நாம் அனைவருமே வள்ளுவர் கூறிய ஆதிபகவன் குழந்தைகள் என்கிறார். வள்ளுவர், மனிதர் அனைவரும் சரி நிகர் சமானம் என்றவர். பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என்றவர். ஆனால் ஆளுநரை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கை அதற்கு நேர்எதிரானது அல்லவா? துணிந்து பொய் சொல் வதும் அதை உரத்து பேசி உண்மை போல் வாதிப் பதும் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு கை வந்த கலை. ஆயினும் அந்த கதை இங்கு எடுபடாது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்து கொள்ள வேண்டும்.