headlines

img

வருத்தமும் மகிழ்ச்சியும்

தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல் எண்ணிக் கையிலிருந்த ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்த கடந்த ஓராண்டாக மாநில அரசு எடுத்துவரும் முயற்சி கள் வரவேற்கத்தக்கவை.  அந்த முயற்சிகளின் காரணமாக, சுமார் 7 லட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்தனர்.  இதன் காரண மாக, அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மட்டும் கூடுதலாக 3,000 வகுப்புகள் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிகரித்த மாண வர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்தது. இதனால் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளிகளுக்கே திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டனர். இதனால் மழலையர் பள்ளிகளில் காலியான இடத்திற்குத் தேவையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு நியமித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மழலையர் பள்ளிகள் இனி அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தான் அந்த குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார்கள் என்றும் அரசு அறிவித்தது சரியல்ல. 

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கல்விக்கட்டணத்தைக் கட்டச்சொல்வது அந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்குப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான். மாற்றுச்சான்றிதழ் கொடுக்கமாட்டேன் என்று கூறுவதும் அதற்கா கத்தான்.  இந்த நேரத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக இருந்தது.  கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பி லிருந்து கடும் அதிருப்தி எழுந்ததையடுத்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டு மழலையர் வகுப்புகள் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் நடத்தப் படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் மழலையர் பள்ளிகளில் குழந்தைக ளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. 

விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் இந்த அறிவிப்பை விரைவாகச் செயல்படுத்த வேண்டும். மாணவர்கள் அதிகமாகச் சேர்கிறார்கள் என்றால் அதற்கேற்ற வகையில் அரசுப்பள்ளிக ளில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத மாணவர்களுக்கு அரசே பணம் வழங்கி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறது. இதைக் கணக்கிட்டால் ஒவ்வொரு வருடமும் ரூ.100 கோடிக்கும் மேல் வருகிறது. இந்தப் பணத்தை வருடா வருடம் முறையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பிற்குச் செலவு செய்யவேண்டும்.