headlines

img

உச்சநீதிமன்றம்:நீதி மறுக்கப்பட்டிருக்கிறது-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்


உச்சநீதிமன்றத்தை சமீப காலங்களில் கவ்விப்பிடித்திருக்கக்கூடிய நெருக்கடி தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி, எழுத்துமூலம் அளித்திருந்த முறையீட்டை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் மேலும் சீர்கெடச் செய்திருக்கிறது. மேற்படி ஊழியர் தன் முறையீட்டின் நகலை உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இது இந்த விவகாரத்தில் மிகவும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே தன் இரு சகோதர நீதிபதிகளுடன் ஒரு சிறப்பு அமர்வை ஏற்படுத்தி, தீர்ப்பு சொல்லியிருந்தார். அதன்மூலமாக இயற்கை நீதியின் அனைத்துக் கொள்கைகளையும் உதாசீனப்படுத்திவிட்டார். இந்த அமர்வாயம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அப்பழுக்கற்றவர் என்று சொன்னதோடு மட்டுமின்றி, இம்முறையீட்டைத் தாக்கல் செய்தவரையும், அவர், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவதற்காக, பிற்போக்கு சக்திகள் மேற்கொண்ட சதியின் ஒரு பகுதியாகவே இம்முறையீட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் என்று முறையிட்டவர் மீதே குற்றஞ்சாட்டி இருந்தனர். இவ்வாறு நீதிபதிகள் மேற்கொண்ட நடைமுறையும் அதன்மீது அவர்கள் பகர்ந்துள்ள தீர்ப்புகளும் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இதர உச்சநீதிமன்ற நீதிபதிகளும் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரானத் தடைச்சட்டத்தின் வரம்புக்குள் வராததன் காரணமாக, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ‘நீதிபதிகளுக்குள் ஒரு குழு’ (‘In-house committee’) அமைக்கப்பட்டது. இத்தகைய குழுவின் விதிகள் மேற்கண்டவாறு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தடைச் சட்டம் கொண்டுவரப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவைகளாகும். மற்ற பல சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவந்ததைப்போல் இதிலும் காலத்திற்கேற்றவிதத்தில், பணியிடங்களில் பெண்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில், பொருத்தமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க முடியும்.

துரதிர்ஷ்டவசமாக, இது செய்யப்படவில்லை. முறையிட்டவருக்கு உதவிடும் விதத்தில் நியாயமாகவும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சாத்தியமானவற்றைச் செய்வதற்குப் பதிலாக, மேற்படி குழுவில் வெளியார் எவரும் நியமனம் செய்யப்படவில்லை. முறையிடுபவர் தனக்கு ‘ஆதரவாளர்‘ எவரையும் அமர்த்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.

விசாரணை, மறு தரப்பிலா (exparte) விதமாகவே தொடர்ந்தது. இதுபோன்ற விசாரணைகளை நீதிமன்றங்கள் ஆட்சேபகரமானவை என்றும் மேலும் நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பல தீர்வறிக்கைகள் மூலம் உயர்த்திப்பிடித்திருக்கின்றன. விசாரணை தொடங்கிய நான்காவது நாளிலேயே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டதாக (exonerated) பிரகடனம் செய்யப்பட்டார். எனினும், முறையிடுபவர், குழுவின் அறிக்கையின் நகல் கூட வழங்கப்படுவதற்கு மறுக்கப்பட்டார். இவ்வாறு இதன்மீதான நடைமுறையானது உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதியின் மதிப்பை மேலும் மங்கச் செய்திருக்கிறது. 

நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் மூத்த வழக்கறிஞர்கள், நடுவர்கள், பெண் சமூக ஆர்வலர்கள் மற்றும் குடிமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. கடைசி புகலிடமாக அவர்கள் உச்சநீதிமன்றத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இது கடுமையாக உலுக்கியிருக்கிறது.

தற்போது பணியிலிருக்கும் நீதிபதியான நீதியரசர் டி.ஒய் சந்திரசூட் முன்மொழிந்த கருத்துக்களை விசாரணைக்குழுவினர் செவிமடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக் குழுவின் தலைவரான நீதியரசர் பாப்டே (Bobde)விற்கு, அவர் எழுதியிருந்த கடிதத்தில், முறையிடுபவர் கூறியுள்ள குறைகளைக் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை பரிந்துரைத்திருந்தார். குழுவில் வெளியார் ஒருவரை நியமனம் செய்திட வேண்டும் என்றும், முறையிடுபவருக்கு உதவிட வழக்குரைஞர் வைத்துக்கொள்ள அனுமதித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இவ்வழக்கை ஒரு பக்கமாக மறு தரப்பிலா (ex parte) விதமாக தொடர்வதற்கு எதிராகவும் எச்சரித்திருந்தார். 

தற்போதைய தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதியான ஜே.எஸ். வர்மா இது தொடர்பாகக் கூறியிருப்பதை, நினைவுகூர்ந்திட வேண்டும். அவர் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தார்: “நீங்கள் எவ்வளவுதான் உயரத்திலிருந்தாலும், சட்டத்திற்கு மேலாக நீங்கள் கிடையாது.”

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றமும் இவ்வார்த்தைகளுக்குச் செவிசாய்த்து, தற்போது நீதிமன்றத்தைச் சுற்றி ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து அதனை மீட்டிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டியது அவசியமாகும்.

(மே 8, 2019)



;