உலகமயக் காலத்தில் பண வீக்கம், பணச் சுருக்கம் இரண்டுமே உழைப்பாளி மக்களைத் தாக்க கூடியவை. பண வீக்கம் விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்து மக்களின்வாங்கும் சக்தியை அரிக்கிறது. இதுவெறும் பொருளாதார நிகழ்வல்ல. அதற்குள் அரசியல் ஒளிந்திருக்கிறது.
மக்கள் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கிற சூழல்களில் விலைவாசி உயர்வு அதைத் தட்டிப் பறிக்கிறது. “அதிகமான பணம் குறைவான சரக்குகளை துரத்தும் போது பண வீக்கம் ஏற்படும்” என்பது பொருளாதார விதி. இதை “கிராக்கியால் தூண்டப்படும் பண வீக்கம்” (Demand Pull Inflation) எனலாம். எளிமையான உதாரணம் எனில், உயர் ஊதியம் வாங்கக் கூடிய மக்கள் வாழும் பகுதியில் உள்ள எல்லா பொருட்களின், சேவைகளின் விலைகளும் அதிகமாக இருக்கிறது. இது கொடுத்து பறிக்கிற பண வீக்கம்.
மேலே சொல்லப்படும் பண வீக்கத்தை விட கடுமையான தாக்குதலை “இடு பொருள் செலவின தூண்டுதல் பண வீக்கம்” (Cost Push Inflation) தொடுக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. மக்கள் கைகளில் பணம் புழங்காமலே விலை அதிகரிக்கும் வகை இது. இது கொடுக்காமலே பறிக்கிற பண வீக்கம். உலகமய காலத்தில் இவ்வகை அதிகமாக உள்ளது. வேலையின்மை, வருமானம் மீது தாக்குதல் ஆகியன அரங்கேறும் பணச் சுருக்க காலத்தில் இவ்வகை பண வீக்கம் அதிகமாக காயப்படுத்துகிறது.
தற்போதைய ஒன்றிய பாஜக அரசு இன்னும் ஒரு படி மேலே போகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தாலும் இங்கே பெட்ரோல் டீசல் விலை குறையாது. வரிகளை போட்டு விலையை அதிகரித்து விடுவார்கள். Tax Push Inflation (வரி தூண்டு தலால் நிகழும் பண வீக்கம்) என்று பெயர் வைக்கலாம். பெட்ரோல் டீசல் விலைகள் இப்படி உயர்த்தப்படும் போது மற்ற சரக்குகளின் விலைகளும் உயர்கின்றன. மோடி காலத்தில் இது மூர்க்கத் தனமாக தாக்குகிறது. சாமானிய மக்களின் சட்டை கிழிந்து தொங்குகிறது.
1991க்குப் பிறகு மிக நீண்ட காலம் கழித்து தற்போது மொத்த விலை புள்ளி குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்துள்ள தாக விபரங்கள் வெளியாகியுள்ளன. 2021 நவம்பரில் 14.21 சதவீதம் அளவிற்கு இந்த பணவீக்கம் பதிவாகியுள்ளது. தொடர்ச்சியான இத்தகைய பணவீக்கங்கள் - கொடிய விலைவாசி உயர்வுகளின் விளைவாக இந்திய மக்களின் உழைப்பும் வருவாயும் பெருமளவு அன்றாடச் செலவுகளுக்குக் கூட போதவில்லை என்ற நிலைக்குத்தான் தள்ளியுள்ளது. இதன் தொடர் விளைவாக இந்தியர்களின் வறுமை அதிகரித்துள்ளது. இப்போதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 27.9 சதவீதமாக உள்ளது. மேலும் 19.3 சதவீதம் மக்கள் வறுமைக்கோடு என்று அரசு குறிப்பிட்ட கோட்டிற்குள் இல்லை என்றாலும் அவர்களும் வறுமையின் பிடியில் தான் சிக்கியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியோ படாடோபமாக கூட்டங்களை நடத்தி வெற்று வாய்ச்சவடால் அடித்து வருகிறார்.