அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவில் திறப்பு விழா இம்மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமானப் பணிகள் முடிவடைதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசர கோலத்தில் திறப்புவிழா தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை மட்டுமே முன்னிறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமஜென்மபூமி அறக்கட்டளை என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டாலும் இதன் பின்னால் இருப்பது முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரமே ஆகும்.
பாஜகவினர் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழுடன் அட்சதை கொடுப்பதோடு திறப்புவிழா அன்று அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என மிரட்டி வருகின்றனர். சிறுபான்மையினரும் கூட விளக்கேற்ற வேண்டும் என பாஜகவினர் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. ஏராளமான மதம் சார்ந்த விழாக்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அதில் மக்கள் பங்கேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அயோத்தியில் நடைபெற இருப்பது ஆன்மீகத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு அரசியல் நிகழ்ச்சியாகும்.
எனவேதான் இந்தியாவிலேயே முதல் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது பாராட்டத்தக்கது.
மதச்சார்பற்ற இந்தியாவை சிதைத்து குறுகிய இந்துத்துவா நாடாக மாற்ற முயலும் பாஜக தன்னுடைய தேர்தல் பிரச்சார மேடையாக ராமர் கோவிலை மாற்ற முயல்கிறது. உண்மையான ராம பக்தர்கள் இதை கண்டிக்க முன்வர வேண்டும். இந்து மதத்தை சேர்ந்த மக்கள் இந்த விழா ஓர் அரசியல் விழா என்பதை உணர வேண்டும்.
நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சி என்பது நாட்டை நாசம் செய்து விட்டது. இந்தியாவின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. இந்த ஆட்சி அகற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். இந்த வேளையில் அனைவரும் ஜனநாயக தீபத்தை உயர்த்திப் பிடித்திட வேண்டும். நாடு முழுவதும் மதச்சார் பின்மை எனும் விளக்கை சுடர்விட்டு எரியச் செய்ய வேண்டும். ராமர்கோவிலைக் காட்டி பாஜக ஏமாற்று வேலையில் ஈடுபட்டாலும் மக்கள் தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளின் அடிப்படையிலேயே தேர்தலில் வாக்களிப்பார்கள். அதற்கான பரப்புரை தீவிரப் படுத்தப்பட வேண்டும்.