ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மத்திய புலனாய்வுத் துறை அனுப்பியுள்ள சம்மன் அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கையாகும். தில்லி காவல்நிலை யத்திற்கு வந்த அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என தில்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும் அவரை வேட்டையாட மத்திய புலனாய்வுத்துறையும், தில்லி போலீசும் பயன்படுத்தப்படுகிறது என்பது உறுதி.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதி யில் சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்று பிர தமர் மோடியிடம் கூறியதாகவும், ஆனால் அதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு பிரதமர் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் சத்யபால் மாலிக் அண்மையில் கூறியிருந்தார்.
தங்களது வேடம் கலைவது கண்டு ஆத்திர முற்ற பாஜகவினர் சத்யபால் மாலிக்கிற்கு மனநிலை பிறழ்ந்துவிட்டது என்று கூறினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா புல்வாமா தாக்குதல் தொடர்பாக தவறு நடந்திருந்தால் அப்போதே ஏன் கூறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் தன்னிடம் இதுகுறித்து பேசக்கூடாது என்று கூறியதாக சத்யபால் மாலிக் கூறியுள்ள நிலையில், அதையும் மீறி அவரால் அப்போது பேசியிருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
சத்யபால் மாலிக் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் முக்கியமானவை. அந்த தாக்குதல் நடந்த போது அவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளு நராக இருந்தவர். ஒன்றிய உள்துறை அமைச்ச கத்தின் அலட்சியமும் சிஆர்பிஎப் படைத் தலை மையின் பொறுப்பற்ற நடவடிக்கையுமே நம்மு டைய வீரர்களின் உயிர்ப்பலிக்கு காரணம் என்று அவர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள் ளார். இதற்கு பொருத்தமான பதில் ஒன்றிய அரசுத் தரப்பில் தரப்படவில்லை.
ஆனால் இன்சூரன்ஸ் தொடர்பான பழைய வழக்கு ஒன்றில் அவர் ஆஜராக வேண்டுமென மத்திய புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பி யுள்ளது. மோடி அரசுக்கு எதிராக யாராவது வாயைத் திறந்தால் இதுதான் கதி என மிரட்டு வதே இந்த சம்மனின் நோக்கம்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சித் தலைவர் களுக்கு எதிராக அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத்துறையும் தொடர்ந்து பயன்படுத்தப் படுகிறது. மனித உரிமைப் போராளிகள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்படு கிறார்கள். அதானி-மோடி கூட்டு ஊழல்கள் குறித்து பேசியதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நரேந்திர மோடி அரசின் பழிவாங்கும் படலத்தின் தனித்தனி காட்சிகளே இவை. புல்வாமா தாக்குதலை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அப்போது மோடி அரசு பயன்படுத்திக் கொண்டது. அது தங்களுக்கு எதிராக தற்போது திரும்புவது கண்டு அவர்களுக்கு சத்யபால் மாலிக் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.