கார்ப்பரேட் வேட்டைக்காடாகும் நகர்ப்புற உட்கட்டமைப்பு
ஒன்றிய மோடி அரசு 2025-26 பட்ஜெட்டில் அறிவித்துள்ள ‘நகர்ப்புற சவால்களை எதிர்கொள்வதற்கான நிதியம்’ (Urban Challenge Fund) என்பது இந்திய நகரங்களைச் சேவை மையங்களாகப் பார்ப்பதற்குப் பதில், லாபம் கொழிக்கும் கார்ப்பரேட் வேட்டைக்காடு களாக மாற்றும் ஒரு பேராபத்தான நகர்வாகும். சுமார் ₹1 லட்சம் கோடி நிதியுதவியுடன் தொடங்கப்படும் இத்திட்டம், நகர்ப்புற வளர்ச்சி யை ஒரு சமூகக் கடமையாகப் பார்க்காமல், அதை முழுமையாகச் சந்தைச் சக்திகளிடம் ஒப்படைக்கும் மிகப்பெரும் மாற்றம் என அரசாங்கமே வெளிப்படையாக ஒப்புக்கொள் கிறது. இது அடிப்படையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு பெருநிறுவனங்களின் கல்லாவை நிரப்பும் ஒரு தந்திரமான ஏற்பாடு.
ஒரு திட்டத்திற்கான செலவில் வெறும் 25 சதவீதத்தை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும்; மீதமுள்ள பெரும் பகுதியை அந்தந்த நகரங்கள் சந்தைக் கடன்களாகவோ அல்லது தனி யார் முதலீடாகவோ திரட்ட வேண்டும் என்கிற விதி, நகராட்சி நிர்வாகங்களைச் சுதந்திர மாகச் செயல்பட விடாமல் கார்ப்பரேட்டு களின் பிடியில் சிக்க வைக்கும். குறிப்பாக, ‘வங்கிக்கு உகந்த’ (Bankable) திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது, இனி குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள்கூட லாப நோக்கம் இருந்தால் மட்டுமே நிறைவேற்றப்படும் என்பதைக் காட்டுகிறது.
₹5,000 கோடி மதிப்பிலான கடன் திருப்பிச் செலுத்தும் உத்தரவாதத் திட்டம் என்பது வங்கிகளுக்கும் தனியார் முதலீட்டாளர்களுக் கும் அளிக்கப்படும் காப்பீடேயன்றி, சாமானிய மக்களுக்கு அல்ல. நகரங்களை ‘வளர்ச்சி மையங்களாக’ (Growth Hubs) மாற்றுகிறோம் என்ற போர்வையில், அடித்தட்டு மக்களை நகரங்களின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டு, வசதி படைத்தவர்களுக்கான ‘கிரியேட்டிவ் ரீ-டெவலப்மெண்ட்’ திட்டங்களை முன்னெடுப் பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.
இந்தத் திட்டம் 4,223 நகரங்களை, குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை இலக்கு வைத்துள்ளது. இதுவரை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த உள்ளாட்சி அமைப்புகளை, முனிசிபல் பாண்டுகள் (Municipal Bonds) மற்றும் வணிக வங்கிக் கடன்களை நோக்கித் தள்ளுவது என்பது, எதிர்காலத்தில் அந்நகரங்களின் வருமானம் முழுவதையும் வட்டி கட்டவே செலவிடச் செய்யும் ஒரு கடன் பொறியாகும்.
பொது நிதியில் இயங்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளைத் தனியார் நிதிச் சந்தையிடம் அடகு வைக்கும் இச்செயல், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் ஜனநாயகத் திற்கும் விடப்பட்ட பெரும் சவாலாகும்.
