headlines

img

வஞ்சனையின் குரல்

வஞ்சனையின் குரல்


பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலியில் உரையாற்றி  வருகிறார். அவருடைய இன்றைய உரையில் காசி தமிழ்ச்சங்கமம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சங்கமத்தின் கருப்பொருள் ‘தமிழ் கற்கலாம்’ என்பதாம். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புல்லரித்து பிரதமர் மோடி தமிழ்மொழியின் மீது கொண்டுள்ள நேசமும் பற்றும் ஆச்சரியப்பட வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ என்பது மகாகவி பாரதியின் வாக்கு. இந்தியாவின் பன்முகத் தன்மையை விவரிக்கும் வரிகள் இவை. ஆனால் காசி தமிழ்ச்சங்கமம் எதற்காக நடத்தப்படுகிறது என்றால் ‘ஒரே பாரதம், உன்னத  பாரதம்’ என்று தமிழில் பிரதமர் குறிப்பிட்டுள் ளார். பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பன்முகப் பண்பாடு என்று  இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பு. ஆனால் ஒற்றைப் பண்பாட்டை திணிப்பதற்காக துடிப்ப வர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர். 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலின் சுருக்கம்தான் பிரதமர் குறிப்பிடும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பது. இந்தி மொழி  திணிப்பை ஏற்க மறுப்பதால்  2024-25, 2025-26 ஆண்டுகளில் தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தை களுக்கு கிடைக்க வேண்டிய 3548.22 கோடி ரூபாயை முடக்கி வைத்துவிட்டு, தமிழில் கற்க என்று காசியில் முழங்குவதால் பிள்ளைகள் எப்படி தமிழ் கற்க முடியும்?

தேவபாசை என்று கூறி சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மோடி அரசு 2014-2025 ஆம் ஆண்டு வரை ஒதுக்கிய தொகை  ரூ.2,532.59 கோடி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட இந்திய மொழி களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.147.56 கோடி மட்டுமே. தமிழுக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தைவிட 22மடங்கு குறைவாக தமிழுக்கு ஒதுக்கிவிட்டு தமிழ் கற்க என்று போலித்தனமாக கூறுவதில் பொருள் உண்டா?

ழடி அகழாய்வை ஒன்றிய அகழாய்வுத் துறை கைவிட்டது மட்டுமின்றி, செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைக் கூட வெளியிட முட்டுக்கட்டை போடுகிறது ஒன்றிய அரசு. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தமிழி எழுத்துக்கள் காணப்படுகின்றன. காலப்புயல் களைக் கடந்து தமிழ் மொழி நிலைத்து நிற்கிறது. அதன் வரலாற்றுப் பெருமையை மூடி மறைக்க முயல்பவர்கள் காசிக்கு வாருங்கள், தமிழ் கற்கலாம் என்று பம்மாத்து செய்வது ஏன்? 

உண்மையில் தமிழ் குறித்து பிரதமர் பேசும் புகழுரைகள் அவரது மனதிலிருந்து வருபவை அல்ல. வெறும் உதடுகளால் மட்டுமே உச்சரிக்கப்படுபவை. அந்த வார்த்தைகளில் உயிர் இல்லை.