games

img

மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்க வேண்டும் - அஸி வீராங்கனை அலிஸா ஹீலி 

மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று பிரபல ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸா ஹீலி கோரிக்கைவிடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னோ அணியை, கொல்கத்தாவைச் சேர்ந்த சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமமும், ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் நிறுவனமும் வாங்கியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் புதிதாக இரு அணிகள் பெரிய தொகையை வழங்கி சேர்ந்ததால் மகளிர் ஐபிஎல் போட்டியை ஆரம்பிப்பது பற்றி பிசிசிஐ யோசிக்க வேண்டும் எனப் பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டியின்போது நடைபெறும் மகளிர் காட்சிப் போட்டிகளை ஒத்திவைத்ததில் நான் ஏமாற்றமடைந்தேன். ஆடவருக்கான ஐபிஎல் போட்டியை நடத்துவதில் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்தார்கள். ஐபிஎல் போட்டி முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் தள்ளிவைக்கப்பட்ட மகளிர் காட்சிப் போட்டிகளை நடத்துவதைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. 

இரு புதிய ஐபிஎல் அணிகளால் 2 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. அதில் கொஞ்சம் மகளிர் கிரிக்கெட்டுக்கும், மகளிர் ஐபிஎல் போட்டிக்கும் செலவழிக்கப்படும் என நினைக்கிறேன். மகளிர் பிக் பாஷ் டி20 போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதை முன்வைத்து மகளிர் ஐபிஎல் போட்டி குறித்த பேச்சு தொடங்கும் என நம்பிக்கை வைக்கிறேன். மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்தி இந்திய மகளிர் அணி எத்தகைய திறமைகளைக் கொண்டுள்ளது என்பதை உலகுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

;