games

img

கட்டுப்பாட்டை இழந்த கார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் வெள்ளியன்று அதிகாலை தில்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.  தில்லி - டேராடூன் நெடுஞ்சாலையின் மங்க்ரூர் பகுதியில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் (சென்டர் மீடியன்) மோதி சில அடிதூரம் சென்று நின்றது. சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. அடுத்த சில நொடிகளில் கார் முற்றிலும் தீப்பிடித்தது. சிறிதளவு தீப்பிடித்த தருணத்திலேயே கார் கண்ணாடியை உடைத்து நல்வாய்ப்பாக ரிஷப் பண்ட் வெளியேறினார். இல்லையெனில் தீவிபத்திலும் சிக்கி இருப்பார். இந்த விபத்தில் ரிஷப் பண்ட்டிற்கு தலை, முதுகு, கால் ஆகியவற்றில் படுகாயத்துடன் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாலை 5 மணி நிலவரப்படி ரிஷப் பண்ட்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், நெற்றியில் வெட்டுக் காயம், முழங்காலில் தசைநார் கிழிவு, மணிக்கட்டு, கால்கள், முதுகில் சிராய்ப்பு என பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மேக்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.