இந்தியளவில் பிரபலமானது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம். இந்த மைதானத்தில் எவ்விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சிரமமின்றி நடத்தலாம் என்பதால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நட்சத்திர அந்தஸ்து லிஸ்டில் வைத்துள்ளது. இந்த அந்தஸ்துக்கு புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக இந்த மைதானத்தில் நடைபெற்றது. 5 நாட்களை கொண்ட டெஸ்ட் போட்டி மூன்று நாள்களிலேயே முடிவடைந்தது. முதல் நாளின் முதல் பகுதியிலிருந்தே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் மாறியது. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், பெங்களூரு டெஸ்டின் போட்டி நடுவராகச் செயல்பட்ட இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் பெங்களூரு மைதானத்திற்கு சராசரிக்கும் கீழ் தனது மதிப்பீட்டை அறிக்கையுடன் வழங்கியுள்ளார். அவரது அறிக்கையில், “பந்து முதல் நாளிலிருந்தே சுழலத் தொடங்கிவிட்டது. இது மிகவும் அதிகமானது. பந்துக்கும் பேட்டுக்கும் இடையில் சமமான போட்டி சூழ்நிலை உருவாகவில்லை. முதல் நாளன்று 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன” என குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீநாத் வழங்கிய அறிக்கை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) அனுப்பப்பட்டு, பெங்களூரு மைதானத்துக்கு ஒரு அபராதப் புள்ளி விதிக்கப்பட்டுள்ளது.