மெஸ்ஸிக்கு காயம்
அதிர்ச்சியில் உறைந்த அர்ஜெண்டினா கால்பந்து ரசிகர்கள்
கால்பந்து அணியின் முன்னணி வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸிக்கு அகில்லெஸ் தசைநார் (குதிகால் எலும்பு டன் இணைக்கும் ஒரு வலுவான இழை தண்டு) பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக “லீக் 1” கிளப் தொடரின் லோரியண்ட் அணிக்கெதிரான ஆட்டத்தில் (ஞாயிறன்று நடை பெற்ற) பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) சார்பாக மெஸ்ஸி களமிறங்க வில்லை. உலகக்கோப்பை தொடங்க இன்னும் 2 வார காலம் உள்ள நிலையில், மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயம் அர்ஜெண்டினா கால்பந்து உலகில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அர்ஜெண்டினா அணியின் முக்கிய நட்சத்திரங்களான ஏஞ்சல் டி மரியா, பவுலோ டைபாலா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது மெஸ்ஸியின் காயம் அர்ஜெண்டினா அணிக்கு மிகப்பெரிய இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டிஸ்சார்ஜ் எப்போது?
அகில்லெஸ் தசைநார் பிரச்சனைக்கு பல்வேறு சிகிச்சை இருந்தாலும், விளையாட்டு வீரர்களுக்கு சிறிய அளவு சிகிச்சை மற்றும் ஓய்வு மட்டும் போதுமானது. அதுவும் கால்பந்து வீரர்களுக்கு தசை கடினமாக இருக்கும் என்பதால் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அகில்லெஸ் தசைநார் உள் வீக்கம், சிவப்பு, எரிச்சல் தோல் அழுத்தும்/தொடும்போது வலி என 4 பிரிவுகளில் உள்ளது. இதில் எந்தவகை மெஸ்ஸிக்கு பாதித்துள்ளது என முழுமையாக தெரியவில்லை. ஆனால் பிஎஸ்ஜி அணி நிர்வாகம் இன்னும் ஒருவார காலத்தில் மெஸ்ஸி பயிற்சிக்கு திரும்புவார் என தெரிவித்துள்ளது. பிஎஸ்ஜி கூற்றுப்படி ஏறக்குறைய 15-ஆம் தேதிக்குள் அர்ஜெண்டினா அணியில் மெஸ்ஸி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் மெஸ்ஸியின் காயம் குறித்து இன்னும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.