facebook-round

img

மகளிர் தொழில் முனைவோர் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பதில் வியப்பில்லை-ஆர்.பாலகிருஷ்ணன்

பெண் தொழில் முனைவோர் தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளார்கள் என்ற கீழ்க்கண்ட பத்திரிகை செய்தியை படித்து நான் வியப்படைய வில்லை. ஏனெனில் இது ஆழமாக வேரூன்றிய தமிழ்ச் சமூக மரபு.

சங்க இலக்கியங்களில் மாட‌மாளிகை கூட கோபுரங்களில் வாழ்ந்த செல்வச் சிறப்புடைய மகளிரையும் சந்திக்கிறோம். அதே நேரத்தில் தனது குடும்பப் பொருளாதாரத்தை கட்டுபடியாக்க மேலும் வலுவாக்க உழைக்கும் மகளிரையும் பார்க்கிறோம். கடை வணிகம் செய்யும் பெண்களையும் சந்திக்கிறோம்.
பால், போர், நெய், மீன், உப்பு போன்றவற்றை பண்டமாற்றாகவும் நாணய மாற்றாகவும் விற்பனை செய்கிற மகளிரை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். கள் விற்கும் பெண்களும் உண்டு. ஆனால் இதை எல்லாம் விட முக்கியமானது கடைத்தெருவில் நள்ளிரவு வரை கடை நடத்திவிட்டு பின்நள்ளிரவில் தூங்கச் செல்லும் கடைக்காரப் பெண்மணிகளையும் மதுரைக்காஞ்சி நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர ( மதுரைக்காஞ்சி 621- 623).

பெரும்பாணாற்றுப்படையில் உமணப் பெண்டிர் வணிகத்தின் பொருட்டு, வண்டியை ஒட்டிச் செல்லும் செய்திக்குறிப்பு காணப்படுகிறது. தினைப்புலத்தைக் காவல் காப்பதற்காகக் கட்டப்பட்ட சிறுவீடு போன்ற பரண்மேல் கோழிக்கூடு, சிறிய உரல், காடிப்பானை போன்றவைகள் நன்கு கட்டப்பட்டுள்ள வண்டியின் முனைப்பகுதியில் தன் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டு, உமணப் பெண்டிர் எருது கட்டப்பட்ட வண்டியினைத் திறம்படச்; செலுத்துகின்றனர் என்று பெரும்பாணாற்றுப்படை நேர்முக வர்ணனை அளிக்கிறது.

“வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேர்க்கும் கூடுடைப் புதவின்
முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
வீசி வீங்கு இன் இயம் கடும்பக் கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்பக்
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணிதோள்”
(பெரும்.ஆற்51-60).

இதை விட மகளிரின் ஆளுமைக்கு வேறென்ன சான்று வேண்டும். இப்போது பெண்கள் ஆட்டோ ஓட்டுவது லாரி ஓட்டுவது போன்ற பணிகளிலும் சூழ்நிலை கருதி ஈடுபட முன்வருவதை செய்தித் தாள்களில் படிக்கிறோம். ஆனால் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட வாழ்வாதார பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டதை இவ்வளவு துல்லியமாக வேறு எந்த மொழி இலக்கியமும் பதிவு செய்யவில்லை. கவிதை எழுதிய பெண்பாற் புலவர்கள்: அரசனுக்கு அறிவுரை கூறிய அறிவுசால் பெண் ஆளுமைகள்; நள்ளிரவு வரை கடை வணிகம் செய்த பெண்கள் என்று பல்வேறு பெண் ஆளுமைகளை சங்க இலக்கியம் நமக்கு காட்டுகிறது. கணவன் இறந்து போனால் முடங்கிப் போய்விடாமல் நெசவுத் தொழிலில் பங்கேற்ற "ஆளில் மகளிரை" அதாவது துணையற்ற பெண்களை "பருத்திப் பெண்டிர்" என்று அறிமுகம் செய்கிறது சங்க இலக்கியம்.
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்களை முற்றிலுமாக விலக்கி வைத்து அதைப் பெருமையாகப் பேசும் எந்தச் சமூகமும் பெண் கல்வியையும் பெண்ணுரிமையையும் வளர்க்க வாய்ப்பே இல்லை. சங்க காலச் சமூகமும் பொருளாதாரமும் ஏற்றத்தாழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது உழைக்கும் வர்க்கத்து பெண்களின் தொழில் வணிக முன்னெடுப்புகளை இழிவுபடுத்தவில்லை. மாறாக பெருமையாகக் தான் பேசுகிறது.‌ இந்திய சமூகத்தில் இப்போது கூட பெண்களின் பொருளாதார பங்களிப்பு எங்கெல்லாம் போற்றப்படுகிறது எங்கெல்லாம் மட்டம் தட்டப்படுகிறது என்பதை சமூகப் புவியியல் கண்ணோட்டத்தில் நுணுக்கமாக பார்த்தால் பல உண்மைகள் விளங்கும். இந்தியாவில் மகளிர் தொழில் முனைவோர் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பதில் வியப்பில்லை. ஏனெனில் அதற்கான ஏதுவான சூழல் தமிழ் மரபில் ஆழமாக வேரூன்றி உள்ளது. சங்க இலக்கியங்கள் அதற்கு சான்றாக நிற்கின்றன.

-Balakrishnan R