தங்க ஊசி என்பதாலேயே வயித்துல குத்திக்க முடியாதுடா என்று எங்கம்மா சொல்லும் ..அதே மாண்போடு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே தொழிலாளர் வேலைநேர சட்டதிருத்தம் ஏற்றுக்கொள்ளமுடியாதது .. 12 மணி நேரவேலை என்பது உடல்சோர்வை மட்டுமல்ல மன அழுத்தத்தையும் தரும்.. இதை அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன் ..
மூன்றுநாட்கள் ஓய்வென்பதெல்லாம் கடைசியில் "அதிகநேர வேலை " செய்தால் பணம் தருகிறோம் என்ற நிலையை எட்டும் .. 8 மணிநேர வேலை என்பதே நீண்டநெடிய போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரபட்டது .. கார்ப்ரேட்களின் கணக்குகூட்டலுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமெனில் இழப்பு நமக்குதான் என்பதை காலம் உணர்த்தும் .. இந்த ஆட்சிக்கு நல்ல பெயர், மக்களிடத்தில் நிம்மதியோடு வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும், கட்சிகாரனை கூட சிபாரிசுக்கு விடாமல் நேர்மையோடு ஆட்சி நடத்துகிறார் என்ற நல்லபெயர் ஒரே நாளில் சரிந்துவிடவேண்டுமா .. ..
தங்களின் அமைச்சர்களில் தங்கமாய் மின்னும் தங்கம் தென்னரசு அதிமுககாரர்கள் கூட விரும்புகிற அமைச்சர், நிதானம் தவறாத நேர்வழியில் திறமையோடு துறையை நடத்திவருகிறவர் .. அதிகாரிகளின் பரிந்துரையோ கார்ப்பரேட்களின் நெருக்கடிக்கோ வளைந்து போவாரெனில் அது திராவிட மாடலுக்கு தீராத வினையை தரும் .. குழு அமைத்து பரிசீலினை செய்வதாக சொல்லியிருப்பது ஆறுதலை தந்தாலும் .. மக்களும் தொழிலாளர் சமூகமும் விரும்பாத, இந்த சட்டவடிவு திரும்ப பெறுவதே சாலச்சிறந்தது ..
மனிதர்களை இயந்திரபடுத்தும் போக்கு மனித உரிமையை பறிப்பதாகாதா .. 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேரம் உறக்கம் என்பதுதான் நியதி மனிதனை உரிமையை பறித்து பணத்தாசை காட்டி உழைப்பை உறிஞ்சும் செயல் இது .. 12 மணிநேர வேலைக்கு சட்ட அங்கீகாரம் என்பது விருப்பபட்டால் செய்யலாம் ஆனால் காலபோக்கில் அது தவிர்க்கமுடியாத கட்டாயமாகிவிடும் .. நாம் மும்மொழிக்கொள்கை ஏன் கடுமையாக எதிர்க்கிறோம் இந்தி மொழியோ பிறமொழியோ திணிக்கபட்டால் தாய்மொழியை கற்பிக்க கூட ஆளில்லாத நிலை வந்துவிடும், படிக்க யாரும் முன்வரவில்லையென ஆசிரியர் நியமனம் தடைபடும் என்பதாலும் கடைசியில் மெல்ல நம்மொழி சாகும் என்பதால்தான் .. 8 மணிநேர வேலைக்கு சென்று வருவதற்கு 10/12 மணிநேரம் ஆகிறது இதில் 12 மணிநேரம் என்றால் குறைந்தது 14/15 மணிநேரமாகும் வேலைஅழுத்தம் இது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்பை தரும் .. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி.. என்றான் வள்ளுவன் நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.. ..
நல்லாட்சியை தருகிற நீங்கள் வெகுமக்கள் ஏற்காத ஒன்றை சட்டமாக்குவதும் முறைதவறிய செயல் ..அரசின் புகழை அது சரித்துவிடும்.. நாடே உற்றுநோக்கும் தங்களின் எண்ணமும் செயலும் இந்திய ஒன்றியமே எதிர்பார்த்து நிற்கும் வேளையில் இந்த இடறல் தேவையில்லை .. தொழிலாளர் விரோதபோக்கு நம்மை வீழ்த்திவிடும் .. .. இந்திய ஒன்றியத்திலேயே முதன்முதலில் தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை அளித்த வரலாறு நமக்குண்டு .. டாக்டர் கலைஞரின் வரலாறு அது.. இறுதியாக மௌலான ரூமி அவர்களின் வரிகளோடு முடிக்கிறேன் "மழைதான் பூக்களை வளர்க்கிறது இடி அல்ல" ..
-ஆலஞ்சியார்