facebook-round

img

மதங்களுக்கு இடையேயான விரோதம் நமது பண்பாடு அல்ல - இரா.முருகவேள்

கோவையில் தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி விட்டது.

1790 களிள் ஒருநாள் இப்போது கோவில் இருக்கும் பகுதியில் திப்பு சுல்தானின் படை முகாமிட்டிருந்தது.

அடுப்பு பற்ற வைப்பதற்காக ஒரு கல்லை தூக்கச் சென்ற ஒரு வீரன் சாமி வந்து ஆடுகிறான்.

' நான் அம்மன் டா. என்னையா அடுப்பு வெக்க தூக்கற ' என்றது அம்மன்.

இதை அருகே இருந்த திப்பு சுல்தானின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.

என்ன வேண்டும் என்று கேட்கிறார் திப்பு.

இந்த கல்லை தெய்வ உருவாகச் செய்து ஆலயம் எழுப்ப வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

திப்பு சுல்தான் கோவில் கட்ட ஒரு பெரிய இடத்தை வழங்கி அதன் திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வர நிறைய நிலங்களையும் வழங்குகிறார். ஆலயம் கட்ட பண உதவியும் செய்கிறார்.

திப்பு வின் ராணுவம் தண்டு இறக்கியிருந்த இடத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் இது தண்டு மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது. தண்டு என்றால் இராணுவ முகம் என்பது தெரியுமல்லவா?

எனக்குத் தெரிந்து இந்தக் கோவிலில் குழந்தை பலி கொடுக்கும் சாவாரக் கல் சிற்பங்களோ உடன் கட்டை ஏறிய சதிக் கற்களோ கழுத்தை அறுத்து தன்னை தானே பலி கொடுத்துக் கொள்ளும் நவ கண்டம் கொடுக்கும் சிற்பங்களோ இல்லை.

இதற்கு வேறு மதத்தவரின் உதவியால் கட்டப்பட்ட கோவில் அல்லது ஆங்கிலேயருடன் போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவசரமாக கட்டப்பட்ட கோவில் என்று எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் இது நல்ல விஷயம் தானே?

இந்து முஸ்லீம் கிருத்துவம் புத்தம் சமணம் சீக்கியம் எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த மத நம்பிக்கையையும் ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் நமது மக்களின் ஒருபிரிவினரை பெரும்பான்மை மக்களுக்கு எதிரிகளாக, பரம்பரை பகைவர்களாக சித்தரிக்கும் சூழலில் இந்த வரலாறுகளை நாம் பேசுவோம்.

மதங்களுக்கு இடையேயான விரோதம் நமது பண்பாடு அல்ல என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்வோம்.

- இரா. முருகவேள்