facebook-round

img

மோடி- அமித்ஷா அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீரத் தலைவர்களில் ஒருவரைச் சென்று சந்தித்த யெச்சூரி

சிறீநகரில் தனது வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள தோழர் முஹம்மது யூசுஃப் தாரிகாமி அவர்களை இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் எச்சூரி சந்தித்துப் பேசி வந்துள்ளார். உச்சநீதிமன்ற ஆணையின் துணையுடன் கடும் கட்டுப்பாடுகள் ஏராளமான காவல் வாகனங்களுக்கு மத்தியில் சிறிது நேரம் தோழரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எச்சூரிக்கு வாய்துள்ளது. இதன் மூலம் மோடி- அமித்ஷா அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீரத் தலைவர்களில் ஒருவரைச் சென்று சந்திக்கும் முதல் முக்கிய தலைவராக யெச்சூரி பதிவு பெறுகிறார்.

தோழர் M.Y.தாரிகாமி "ஒன்றாக இருந்த" (ஆம்.. இனி அப்படித்தானே சொல்ல வேண்டும்..) காஷ்மீர் மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கட்சிச் செயலர் மற்றும் மத்திய குழு உறுப்பினர். காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் அனைத்திலும் மக்களோடு நின்றவர். மனித உரிமை மீறல்களைக் கடுமையாகக் கண்டித்து வந்தவர். காஷ்மீர் பிரச்சினை குறித்து நான் எழுதத் தொடங்கிய காலம் முதல் அவர் ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன சொல்கிறார் என்பதைக் கவனித்து வருகிறேன்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து மைய நீரோட்ட மைப்பினர், ஹுரியத் அமைப்பினர், முஜாஹிதீன்கள் ஆகிய பல பிரிவினரும் பல்வேறு பார்வைகளும் அணுகல்முறைகளும் கொண்டிருந்த போதும் அம் மக்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறைகளைக் கண்டிப்பதிலும், இந்திய அரசு அம் மக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் என்பதிலும், இராணுவ அக்கிரமங்களையும் அத்துமீறல்களையும் எதிர்ப்பதிலும் எப்போதும் ஒத்த கருத்து உடையவர்களாகவே இருந்துள்ளனர். அந்த வகையில் காஷ்மீர மக்களின் உரிமைப் போராட்டங்களுக்குத் துணை நின்றவர் தாரிகாமி.

குல்காம் தொகுதி மக்கள் தாரிகாமியை நான்கு முறை தங்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. தோழர்கள் யெச்சூரிக்கும் தாரிகாமிக்கும் வாழ்த்துக்கள்.

-Marx Anthonisamy