சிலகாலம் முன்பு எதிரெதிரே இருவர் எதேச்சையாக சந்தித்துக்கொண்டால், எங்கே அப்படியே கிளம்பிட்டீங்க என்று ஒருவர் கேட்டால், இன்னொருவர் தனியாக இருக்க போரடிக்குது, அதனாலதான் அப்படியே போயிட்டு வரலாம் என்று வந்தேன் என்பார். தனியாக இருக்கிறோம் என்று உணர்ந்தால் கோயிலுக்கோ, குளத்துப்பக்கமோ, பக்கத்து வீட்டிற்கோ, கடைவீதிக்கோ, சினிமாவுக்கோ, நூலகத்துக்கோ என்று ஏதாவது ஒரு வழியில் தனிமையான அந்த நேரத்தை கடக்க முயற்சி நடக்கும். அதனால் அந்த தனிமை உணர்வு நீங்கி மனது புத்துணர்வு பெறும். இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தவரை குடும்பப்பாசம், உறவு, நட்பு எல்லாம் கொஞ்சம் குதூகலமாகத்தான் இருந்தன.
இப்போது ஆன்ட்ராய்டு செல்போன் என்ற ஒரு குட்டிச்சாத்தான் வருகைக்குப்பிறகு, அதை சாதாரணமாக அனைவரும் பயன்படுத்த கற்றுக்கொண்டபிறகு, அதிலும் அதனுடன் இணையதள இணைப்பு இணைந்த பிறகு மனிதர்களுக்கு தனிமைதான் இனிமை என்றாகி விட்டது. நவீனம் பல நல்ல பயன்களை தகவல் பரிமாற்றத்தில் மனிதனுக்கு கொடுத்துள்ளன என்றாலும் அதன் பாதிப்பான மறுபக்கத்தை நாம் பார்க்காமல் இருக்கமுடியுமா? ஆளுக்கு ஒரு செல்போன் எடுத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டு பக்கத்தில் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல், அருகில் இருப்பவர் ஏதாவது கேட்டால் சில நொடிகள் கடந்து அப்போது கேட்டதுபோல் திடீரென பதில் சொல்வதும், நமது கவனம் முழுவதும் செல்போன் மீதே இருப்பதுமான ஒரு தனிமை உலத்தில் நாம் வாழத்துவங்கி விட்டோம்.
தனிமையில் எத்தனை நாட்கள் விட்டாலும் பரவாயில்லை, ஆனால் இந்த செல்போனை நெட்கணைக்கசனுடன் கொடுத்துவிடுங்கள் போதும் என்ற சிந்தனை மேலோங்கிவிட்டது. ஆத்மாத்மமான குடும்ப உறவு, நட்பு, சுற்றம் என அனைத்திலும் சிறு இடைவெளிகள் ஆரம்பித்து, அந்த நிகழ்வுகள் நடந்தால் அவை அதிசயங்களாக மாறிக்கொண்டு உள்ளன. முதலாளித்துவத்திற்கு மனிதர்கள், குறிப்பாக உழைக்கும் மக்கள் கூடிப்பேசி, அனைவரும் கலந்து சிந்திக்கும் நிலைமைகள் அறவே இல்லாதிருப்பது என்பதே பிடித்தமான ஒன்று, அது இப்போது கணக்கச்சிதமாக நிறைவேறி வருகிறது.
கைப்பேசியை பார்த்துக்கொண்டு, காதில் ஒலிப்பானை மாட்டிக்கொண்டு தாமாக சிரித்துக்கொண்டு, தம்மிடம் ஏதாவது சொல்ல வந்தால் கொஞ்சம் ப்ளீஸ் ஒரு நிமிடம் என கையால் சைகை செய்வது, பின் சிறிது நேரம் கழித்து காதில் இருந்து ஒலிப்பானை எடுத்து ம்ம்ம் சொல்லுங்கள் என்று கேட்டு அறைகுறையாக அதற்கு பதில் சொல்லி விட்டு, மீண்டும் பழையநிலைக்கே திரும்புவது இதுவெல்லாம் மனித வாழ்க்கையின் எதிரிகள் என்பதை உணர்வோம். ஆனால் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதுபோல் அப்போது மட்டும் செல், நெட், வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என அனைத்தையும் விலக்கி விடுகிறோம். எனவே அடிப்படை "பசிதான்" பசியை போக்க உணவு தேவை, உணவு உற்பத்திக்கு உழைப்பு தேவை, சக்திமிக்க மனித உழைப்புக்கு தகுந்த ஊதியம் தேவை, இந்த தாரக மந்திரம் செல்போன் உலகத்தில் தத்திங்கிணித்தாளம் போடுகிறது. மனித சிந்தனையில் புதிய புரட்சிமலர்கள் பூக்கவேண்டும், அவை புத்துலகை படைக்க வேண்டும்.