election-2019

img

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கரூர்:

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து ஆளும் அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். இந்த நிலையில் கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி அருகே லிங்கநாயக்கன்பட்டியில் ஜோதிமணி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஜோதிமணியின் அருகே இருந்த கட்சி தொண்டர்கள் , அந்த இரண்டு நபரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து, வேட்பாளர் ஜோதிமணி  அரவக்குறிச்சி காவல்நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, பிரச்சாரத்தில் இருந்த எங்களை மறித்த இரண்டு பேர் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது. அமைச்சர் உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்றார். அதற்குள் கூட இருந்த மற்றொருவர் கத்தியை எடுத்து குத்து என்றார். எனவே, அதிர்ச்சியடைந்த எங்கள் கட்சிக்காரர்கள், மிரட்டல் விடுத்தவர்களை, பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி தனது டிவிட்டர் பக்கத்தில் தோல்வி பயத்தில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் அடியாட்களை ஏவி விட்டு இருக்கிறார்கள். தம்பிதுரை போகும் இடமெல்லாம் மக்கள் விரட்டி அடிக்கின்றனர். என்னை மக்கள் அன்பாக வரவேற்கின்றனர். அந்த விரக்தியில் தம்பிதுரை எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டார் என குறிப்பிட்டுள்ளார். 

;