புதுதில்லி,ஜூன் 12- ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராகிங் தடுப்பு விதிமுறைகள், 2009-ஐ பின்பற்றாத இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்கள்), மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் உட்பட 89 நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியார் பல்கலைக்கழகம் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மாணவர்களிடமிருந்தும் ராகிங் தடுப்பு விதிமுறைகளை சமர்ப்பித்து ஆன்லைனில் உறுதிமொழிகளைப் பெறுமாறும், . ராகிங்கைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை அளிக்குமாறும் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.