நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதமானது கடந்த மார்ச் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95 சதவிகிதமான உச்சம் தொட்டுள்ளது. இது உணவு பொருட்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றது. இதே நுகர்வோர் விலைக் குறியீடானது பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவிகிதமாக இருந்தது. உணவு பணவீக்கமானது 5.85 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது அது 7.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த பணவீக்க அளவானது தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு மேலாக இருந்து வருகின்றது. மொத்தத்தில் உணவு பொருட்களின் விலை பணவீக்கத்தில் கிட்டதட்ட பாதியாக உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. போரினால் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை உலகளாவிய அளவில் சமையல் எரிவாயு சப்ளை பாதிப்பு, தானிய விலையேற்றம், உர ஏற்றுமதி உள்ளிட்டவைகளை சீர்குலைத்துள்ளது. இதுவும் பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்ததுள்ளது.
பாமாயில் எண்ணெய்யின் விலை இந்த ஆண்டு கிட் டதட்ட 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பணவீக்கத்தினால் மிக மோசமான பாதிப்பினைக் கண்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பணவீக்கம் மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம்
கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில் 18.8 சதவிகிதமாகவும், காய்கறிகள் பிரிவில் 11.6 சதவிகிதமாகவும், இறைச்சி மற்றும் காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் 9.6 சதவிகிதமாகவும், உடைகள் மற்றும் காலணிகள் பிரிவில் 9.4 சதவிகிதமாகவும் இருந்தது. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பணவீக்கம் 8 சதவிகிதமாகவும், சுகாதாரப் பிரிவில் 7 சதவிகிதமாகவும் உயர்ந்திருந்ததாக புள்ளியியல் அமைச்சகம் கூறியுள்ளது.
கிராமப்புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 7.7 சதவிகிதமாக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் அது 6.1 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி அதிகரித்ததாக அரசு விளக்கம் அளித்துள்ளது. பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதால் நிலைமையை சமாளிக்க வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.