குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக பின்தங்கிய வகுப்பான வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த நந்தகுமார் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நந்தகுமார் கூவத்தூரில் சலவை நிலையம் வைத்து நடத்தி வருகிறார், இவரையும், இவர் குடும்பத்தை சார்ந்தவர்களையும், குலத்தொழிலை செய்யாமல் ஏன் வேறு இடத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்கள் என கிராம மக்கள் அவரையும் அவர் குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்குவதாகவும், அவர்களை கோயில்களில் அனுமதிப்பதில்லை எனவும் நந்தகுமார் குற்றம் சாட்டிவருகின்றார். மேலும் கிராமத்தை சார்ந்த ஆதிக்க சாதியினர் சாதியரீதியாகவும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியும், வன்மமாக பேசியும் வந்துள்ளனர்.
மேலும், கடந்த ஜனவரி 24-ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய நந்தகுமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஆதிக்க சாதியினர் நந்தகுமாரின் வீட்டிற்கு தீயிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் நந்தகுமார் குடும்பத்துடன் உயிர் தப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து நந்தகுமார் தன்னுடைய குடும்பத்தினருடன் கூவத்தூர் காவல் நிலையம் சென்று புகார் மனு கொடுத்துள்ளார். கூவத்தூர் காவல் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த குடும்பம் பெரும் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நந்தகுமார் குடும்பத்தை ஊர் வேலைக்கு கட்டாயப்படுத்துவதும், அநாகரிகமாக பேசி அவமதிப்புடன் நடத்துவதும், உயிருக்கு மிரட்டல் விடுவதுடன் வீட்டுக்கு தீ வைத்து வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்திட வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பம் அச்சமின்றி சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப்.7) மாவட்ட பொருளாளரும் சமூக பண்பாட்டு பணியாளர் குடிஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் எ.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகைள விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, முன்னணியின் மாவட்ட தலைவர் இ.சங்கர், மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன், சமுக பண்பாட்டு பணியாளர் போராட்டக்குழு நிர்வாகி பெருமாள் குமாரசாமி, தமிழ்நாடு வண்ணார் பேரவை நிர்வாகி மணிபாபா, வண்ணார் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகி சீரங்கன், சாமன்ய மக்கள் நீதிக்கட்சி நிர்வாகி பாலமுருகன், தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்கம் நிர்வாகி பாலன், சலவை தொழிலாளர் பேரவை நிர்வாகி பாலு, புதிரை வண்ணார் சங்கத்தின் நிர்வாகி ஜீவானந்தம், உள்ளிட்ட பலர் பேசினர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன் பேசினார். பாதிக்கப்பட்ட நந்தகுமார் நன்றி கூறினார் முன்னதாக அமைப்புகளின் நிர்வாகிகள் மதுராந்தகம் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.