districts

img

தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு: எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் ஏப். 18 - வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரத் (26). இவர் நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கும் மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி என்பருக்குமிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் தன்னை அடிக்கடி மிரட்டுவதாக கூறி, கடந்த 11ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத் ஞாயிறன்று (ஏப். 17)உயிரிழந்தார். இதனால் இளைஞர் சரத்தின் உறவினர்கள், சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தற்கொலைக்கு காரணமான உதவி ஆய்வாளர் கார்த்தி மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஞாயிறன்று திருவலம் - பொன்னை சாலையில், குகையநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் அரசியல் கட்சியினருடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுகுறித்து வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவருக்கு தகவல் அளித்தார். அவர் உதவி ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தும் மற்றும் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார். நிவாரணம் வழங்குக இந்நிலையில் சிபிஎம் வேலூர்  மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி விடுத்துள்ள அறிக்கையில், இளைஞர் சரத்தை தற்கொலைக்கு தூண்டிய உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்து, அவர்மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடன் இருந்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே 18.4.2022 திங்களன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சரத்தின் பெற்றோருடன் சென்று, வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஆனிவிஜயாவிடம் மனு அளித்தனர்.